பதிவு செய்த நாள்
07
ஆக
2017
12:08
திருவண்ணாமலை : திருவண்ணாமலை நகராட்சிக்கு சொந்தமான கிணற்றை துார் வாரும் போது, பழங்கால அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை, சுண்ணாம்புக்கார தெருவில், நகராட்சிக்கு சொந்தமான, 70 அடி கிணறு உள்ளது. இந்த கிணறு, 1.25 லட்சம் ரூபாய் செலவில், துார் வாரப்பட்டு வருகிறது.கிணற்றில் பணியாளர்கள் துார் வாரிய போது, மூன்றடி உயரமுள்ள, சிலை கண்டெடுக்கப் பட்டது.ஆதி காமாட்சி அம்மன், நாகாபரணம் அணிந்த நிலையில், சிவனுக்கு அபிஷேகம் செய்வது போல், அந்த சிலை இருந்தது. அங்கு திரண்ட மக்கள், சிலைக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, பூஜை செய்தனர்.தகவல் அறிந்த தாசில்தார் ரவி, அங்கு சென்று சிலையை மீட்டு, தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.இந்த சிலை மிகவும் பழமையானதாக கருதப்படுவதால், வேறு ஏதாவது கோவிலில் இருந்து திருடப்பட்டு, கிணற்றில் போடப்பட்டதா என, அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.இது குறித்து, வருவாய் துறை அதிகாரிகளும், திருவண்ணாமலை போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.