பதிவு செய்த நாள்
12
அக்
2017
12:10
மானாமதுரை: ‘தீபஒளி’திருநாளான தீபாவளி திருநாளுக்கு தமிழகத்தில் பெரும்பாலான வீடுகள் தோறும் இனிப்பு செய்து, புத்தாடை உடுத்தி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடின்றி பட்டாசு வெடித்து கொண்டாடும் முக்கிய நாளாகும். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற பெரும்பாலான வடமாநிலங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் தீபாவளிக்கு வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றி வழிபடுகின்றனர். வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி, பித்தளை, அலுமினியம், எவர்சில்வர் போன்ற உலோகங்களினால் ஆன விளக்குகளையும்,பலர் மண்ணால் ஆன மண் விளக்குகளையும் ஏற்றி வழிபடுகின்றனர். மண்ணால் ஆன விளக்குகளை வடமாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலான வியாபாரிகள் தீபாவளிக்கு 3 மாதங்களுக்கு முன்பே மானாமதுரைக்கு வந்து ஆர்டர்கள் கொடுத்து விட்டு செல்கின்றனர். அவர்கள் விரும்பும் உயரங்களில் நல்ல கலைநயத்துடன்,விரைவில் உடையாதவாறு பாதுகாப்பாக மண்பாண்ட கலைஞர்கள் விளக்குகளை செய்து கொடுத்து வருகின்றனர்.
இது குறித்து மண்பாண்ட தொழிலாளி சோமன்35,கூறியதாவது: வடமாநிலங்களில் பெரும்பாலும் பட்டாசுகள் வெடிப்பதற்கு பதிலாக விளக்குகளையே வீட்டில் ஏற்றி வழிபடுகின்றனர். தீபாவளி வருவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே நாங்கள் விளக்குகள் தயாரிக்கும் பணியை துவங்கி விடுவோம். தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பே வியாபாரிகள் கொடுத்த ஆர்டர்களை முடித்து கொடுத்து லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்து விடுவோம் என்றார்.