இங்கிலாந்தை கிராம்வெல் என்பவர் ஆண்டு கொண்டிருந்தார். ஒருமுறை அந்நாட்டை பகைவர்கள் தாக்கினர். போர்க்களத்தில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் வீரன் ஒருவன் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு வரவில்லை. அரசர் இதைக் கவனித்து விட்டார். மறுநாள் அவனை சபைக்கு இழுத்து வர உத்தரவிட்டார். அவனுக்கு மரண தண்டனை விதித்தார். நாளை மாலை ஆறு மணிக்கு ஆலயமணி அடித்து முடித்ததும், இவன் சுட்டுக் கொல்லப்பட வேண்டும், என்பது உத்தரவு. மறுநாள் ராஜா மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப் படுவதற்காக அந்த வீரன் கொண்டு வரப்பட்டான். ஒரு தூணில் கட்டப்பட்டான். அவன் எதிரே துப்பாக்கி ஏந்திய மற்றொரு வீரன் அவனை சுடுவதற்கு தயாராக இருந்தான். ஆறுமணியைத் தாண்டி விட்டது. மணிச்சத்தம் கேட்கவில்லை. அப்போது ஒரு பெண் கையில் ரத்தம் சொட்ட சொட்ட எலும்புகள் நொறுங்கி ஓடி வந்தாள். அரசர் அவளிடம் என்ன ஏதென்று விசாரித்தார்.
அரசே! இதோ, உங்களால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர் என் கணவர். அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அவர் மீது கடும் அன்பு வைத்துள்ளேன். போரில் இறந்து விடுவாரோ என்ற பயத்தில் அவரை நான் தான் தடுத்து விட்டேன். வேண்டுமானால் என்னைத் தண்டியுங்கள், என்றாள். அரசர் அவளிடம், அதிருக்கட்டும். உன் கையில் ரத்தம் வழியக் காரணம் என்ன? என்றார். எங்கள் ராஜாவே! ஆறு மணியானதும் ஆலயமணியை ஊழியர் ஒலித்தார். அவர் காது கேளாதவர் என்ற விபரம் நமக்கெல்லாம் தெரியும். நான் கோபுர உச்சியில் ஏறி மணியின் நாக்கைப் பிடித்துக் கொண்டேன். மணி ஒலிக்காமல் என் கையை நசுக்கியது. என் கணவர் கொல்லப்பட்டு விடக்கூடாது என்பதால் இவ்வாறு செய்தேன்,என்றாள். கணவன் மீது உண்மையிலேயே பாசம் கொண்டவள் அந்தப் பெண் என்பதை உணர்ந்த அரசர் அவர்களின் அன்பைப் பாராட்டி விடுதலை செய்தார். இயேசு கிறிஸ்துவும் இப்படிப்பட்ட தியாக சீலர் தான். பாவம் செய்தவர்களைத் திருத்த சிலுவையில் தன் கரங்களில் அடிக்கப்பட்ட ஆணியை ஏற்றுக் கொண்டு ரத்தம் சிந்தினார். அன்பான உலகம் படைக்க எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்க வேண்டும்.