பதிவு செய்த நாள்
29
ஜன
2018
01:01
ஊத்துக்கோட்டை : பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட யோகாம்பாள் உடனுறை ஆத்மநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளானவர்கள் வழிபட்டனர். எல்லாபுரம் ஒன்றியம், தண்டலம் அடுத்த, பெரியவண்ணாங்குப்பம் கிராமத்தில் உள்ளது யோகாம்பாள் உடனுறை ஆத்மநாதீஸ்வரர் கோவில். இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. பக்தர்கள் பங்களிப்புடன் கோவிலை சீரமைக்கும் பணி, துவங்கி நடந்து வந்தது. பணி முடிந்து, நேற்று காலை, கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, கடந்த, 26ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா துவங்கியது. மறுநாள், குரு வணக்கம், மங்கள வாத்தியம், திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகளும், நேற்று, காலை, 4:30 மணிக்கு, திருப்பள்ளியெழுச்சி, அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு மறைகளையும்... வகுத்தளித்த பெருமானுக்கு வேள்வி பூஜை, காலை, 8:00 மணிக்கு மங்கள வாத்தியம், கலச புறப்பாடு, திருநீற்று காப்பு வழங்குதல் மற்றும் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.