பதிவு செய்த நாள்
13
மார்
2018
11:03
திருவொற்றியூர்: பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடக்கும், கோவில் குளத்தை துார்வாரி, தண்ணீர் தேங்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். திருவொற்றியூரில், தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ஆதிஷேச குளத்தில், பல ஆண்டுகளாக தண்ணீர் தேங்கவில்லை. 2015ல், கொட்டித் தீர்த்த கனமழைக்கு, பாதியளவிற்கு குளம் நிரம்பியது. இதனால், 10 ஆண்டுகளுக்கு பின், 2016ல், இந்த குளத்தில், தெப்ப உற்சவம் நடந்தது. பின், ஓராண்டு இடைவெளிக்கு பின், குளத்தில் இருந்த முழங்கால் அளவு தண்ணீரில், தெப்ப உற்சவம் நடைபெற்றது.இந்நிலையில், குளத்தை சீரமைத்து, தண்ணீர் தேங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் வடிகால்கள் அனைத்திலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பல்வேறு முறை புகார் தெரிவித்தும் அவற்றை சீரமைக்காமல், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் குளத்தில், 26 லட்சம் ரூபாய் செலவில், களிமண் நிரப்பும் திட்டத்தை, கோவில் நிர்வாகம் செயல்படுத்த உள்ளதாக தெரிகிறது. எனவே, கோடை காலத்திலேயே குளத்தை துார்வாரி, தண்ணீர் தேங்கும் வகையில் களிமண் நிரப்ப வேண்டும். அப்போது தான், மழைக்காலத்தில் கிடைக்கும் நீர், குளத்திற்கு தேங்கும் நிலை ஏற்படும் என, பக்தர்கள் மற்றும் அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.