ராமபிரான் வடக்கே இமயம் தொடங்கி, தெற்கே இலங்கை வரையிலும் தன் பாதம் பதித்து அடர்ந்த வணங்களைக் கடந்து பயணித்திருக்கிறார்! பதினான்கு ஆண்டு வன வாசம் என்று அன்னை கைகேயியிடம் வரமாய்க் கேட்டுப் பெற்றதே இந்த வனங்களில் உலவி அனைவருக்கும் தன் அன்பையும் அருளையும் அள்ளி வழங்குவதற்காகத்தான் என்று புரிகிறது. அவ்வாறு தென்னிலங்கை அரக்கருக்கும் அருள்புரியத்தானோ சீதையைக் கவர்ந்து வந்ததன் மூலம் ராமனையும் இலங்கைக்கு வரவைத்தான் ராவணன்! ராவணனின் அரக்கர் படையை எதிர்கொள்ள ராமபிரானின் வானரப் படைகள் முகாமிட்ட ராம்போடா பகுதியில் ஓர் அனுமன் கோயிலை இலங்கையின் சின்மயா மிஷன் காட்டியுள்ளது. ராமாயண இதிகாசம் இந்த இடத்தை அவ்வளவு தத்ரூபமாகக் காட்டுகிறது. ராமனின் படை என்பதே ராம் படை என்றும் ராம்போடா என்றும் அழைக்கப்பட்டதாம். அதுவே, ராம்போடா எனப்படுகிறது. இந்த மலையில் இருந்துதான் அன்னை சீதா தேவியை அனுமன் தேடத் தொடங்கினார். ராம்போடா செல்லும் வழியில் ஒரு மலைக் குகையைக் காணலாம். ராம்போடா அருவிக்கு அருகில் நுவாரா எலியாசாலையில் கம்போலா பகுதியில் அமைந்துள்ளது. இலங்கøயின் மிக நீளமான இந்த சாலை வழி குகை. சுற்றிலும் பசுமை போர்த்திய வனம் நம்மை இனிய மயக்கத்தில் ஆழ்த்தும்.
அன்னையைத் தேடி வந்த அனுமனும் அப்படி மயங்கித்தான் போனான். கவிச் சக்கரவர்த்தி கம்பர் சுந்தரகாண்டத்தில் இந்த மலையை பவள மலையாகச் சொல்கிறார். இந்த மலையில் நின்று இலங்கையை நோக்குகிறான் அனுமன். சொர்க்கமே மண்ணில் வந்த அழகோ என்று மயங்குகிறான். வானை முட்டும் மலை முகடுகளுடன் கண் திருஷ்டிப்படும் அளவுக்கு இலங்கை தெரிவதை கம்பர் பாடினார். ராம்போடாவில் வெவண்டன் மலைப் பகுதியில் தாவலம்டெனெ என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில். அனுமனே பிரதானமான தெய்வமாக அருள்புரிகிறார் 16 அடி உயரம். நெடிதுயர்ந்த நிலையில் காட்சி தரும் அனுமனை தரிசிக்கும்போது அனுமன் எடுத்த விஸ்வரூபத்தை நம் மனக்கண்ணில் காண்கிறோம். சன்னிதி கருவறையைச் சுற்றிலும் கிரானைட் கற்கள் வைத்து அழகாகப் பார்த்துப் பார்த்துக் கட்டியிருக்கிறார்கள். பவுர்ணமி பூஜையின்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அனுமனை தரிசிக்க இங்கே வருகின்றனர். சீதா தேவியைக் கடத்தி வந்து சிறை வைத்த ராவணன் தன் நாட்டின் அழகைக் காட்டி, அவள் மனத்தை மாற்ற முயற்சி செய்தானாம். இயற்கை எழில் கொஞ்சும் இலங்கை ராஜ்ஜியத்தைப் பார் என்று சீதைக்குக் காட்டி புஷ்பக விமானத்தில் இந்த வழியேதான் அவளை அசோகவனத்துக்குக் கொண்டு சென்றானாம். 40 அடி உயரத்தில் உள்ளது இந்தக் கோயில். முன்மண்டபமும் இரு தூண்களும் அதன் பிரமாண்டத்தைக் காட்டுகின்றன. தென்னிந்திய பாணியில் அமையப்பெற்ற கோயில்தான். அனுமன் ருத்ராம்சம் என்பதால் இங்கே சிவசங்கரருக்கு ஒரு சன்னிதி அமையப்பெற்றுள்ளது. சிறிய சிவலிங்கம் அருகே ஒரு சிறு சன்னிதியில் தன் பக்தன் அனுமனுக்காக தேவி சீதையுடனும் தம்பி இலக்குவனுடனும் ராமபிரான் கோயில் கொண்டு அருள்புரிகிறார்.
இங்கே அனுமனுக்கு செந்தூரம் சாற்றி அதையே பிரசாதமாகத் தருகிறார்கள். செந்தூரம் என்பது வெற்றியைக் குறிக்கும். அனுமன் வெற்றிகள் பல குவித்தவர் என்பதால் செந்தூரமே அவருக்குச் சாற்றப்படுகிறது. அனுமன் வெற்றி தரும் தெய்வம் என்பதால் செந்தூரமே அவருக்கு சாற்றப்படுகிறது. அனுமன் வெற்றி தரும் தெய்வம் என்பதால் அனுமன் கோயில்களில் மட்டுமே நாம் செந்தூரப் பிரசாதத்தைப் பெறுகிறோம். சிறப்பான நாட்களில் பட்டுத் துணிகளாலும், வண்ண நூல்களாலும், பூக்களாலும் அலங்கரித்து அனுமனை அழகு செய்கின்றனர். அனுமத் ஜயந்தி இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.