பதிவு செய்த நாள்
01
அக்
2018
11:10
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரியில், மகா புஷ்கரம் விழா கொண்டாடப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, அந்திம புஷ்கரம் விழா, 11ம் தேதி வரை நடக்கிறது. குரு பகவான், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததையொட்டி, துலாம் ராசிக்கு உரிய, காவிரி நதியில், கடந்த ஆண்டு, செப்., 12 முதல், 24ம் தேதி வரை, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும், மகா புஷ்கரம் விழா கொண்டாடப்பட்டது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நடை பெற்ற புஷ்கர விழாவில், தமிழக முதல்வர், சங்கராச்சாரியார்கள், ஆதீன குருமகா சன்னிதானங்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். தற்போது, குரு பகவான், துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்வதை முன்னிட்டு, திருநெல்வேலி குறுக்குத்துறையில், அக்., 10 முதல், 23 வரை, விருச்சிக ராசிக்கு உரிய நதியான, தாமிரபரணியில், புஷ்கரம் விழா நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், காவிரி மகா புஷ்கரம் நடந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில், செப்., 30 முதல் அக்., 11ம் தேதி வரை, 12 நாட்கள், அந்திம புஷ்கர விழா நடைபெற உள்ளது.
விழாவிற்கான பிரதான பூஜைகள், அக்., 8ல் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. விழாவின் கடைசி நான்கு நாட்கள், வேதபாராயணம், ஹோமம், தீர்த்தவாரி ஆகியவை நடைபெற உள்ளன.விழா முன்னேற்பாடு கள் குறித்து, காவிரி புஷ்கர விழா கமிட்டி ஒருங்கிணைப்பாளர், மகாலட்சுமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் மற்றும் விழா கமிட்டி உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.காவிரி புஷ்கர விழாவில் புனித நீராடியதன் பலனை, அந்திம புஷ்கர விழாவில் நீராடுவதன் மூலம் அடையலாம் என, காவிரி மகா புஷ்கர விழா கமிட்டியினர் தெரிவித்தனர்.