பதிவு செய்த நாள்
15
அக்
2018
10:10
நாகர்கோவில் : பண்பாட்டைக் காப்பதற்காக, உயிரை துச்சமாக மதிக்கும் பெண்கள் இருக்கும் வரை, சபரிமலையில், 10 - 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிக்கும் முயற்சி நடக்காது, என, தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில், குமரி மாவட்டம், அருமனையில், நேற்று முன்தினம் மாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது. கேரளாவில், கம்யூனிஸ்ட் கட்சி, தன் கடைசி அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது. கேரளாவில், சிவப்புப் புரட்சியை, காவிப் புரட்சி தோற்கடிக்கும்.
சபரிமலை செல்வதற்கு ஆண்களைப் போல பெண்களுக்கும் உரிமை கொடுக்கிறோம் என, உச்ச நீதிமன்றம் சொல்லும் போது, அந்த உரிமை எங்களுக்குத் தேவையில்லை என, மக்கள் ஒன்று திரண்டிருப்பது பெரிய புரட்சி. நம் போராட்டங்கள் உச்ச நீதிமன்றத்தின் காதுகளை எட்ட வேண்டும். பண்பாட்டைக் காப்பதற்காக, உயிரை துச்சமாக மதிக்கும் பெண்கள் இருக்கும் வரை, சபரிமலையில், 10 - 50 வயது பெண்களை அனுமதிக்கும் முயற்சி நடக்காது. இவ்வாறு அவர் பேசினார். சபரிமலை பாதுகாப்பு இயக்கத் தலைவர், கே.எஸ். முருகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்டோர், சபரிமலையைக் காப்போம் என, உறுதிமொழி ஏற்றனர்.
சரண ஊர்வலம் : கேரளா, மூணாறில் நேற்று, சபரிமலை புனிதத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி, சரண ஊர்வலம் நடந்தது. அப்போது, சபரிமலை செல்லப் போவதில்லை என, பெண்கள் உறுதிமொழி எடுத்தனர். மழை பெய்தபோதும், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தினர் ஏற்பாடு செய்த ஊர்வலத்தில், மூணாறு ஹிந்து தேவஸ்தானம், அனைத்து பழநி பாதயாத்திரை குழு, மேல்மருவத்துார் ஆதிபாரசக்தி குழு, ஸ்ரீவாரி சங்கம், சத்ய சாய் சேவா சங்கம், பா.ஜ., - காங்., உட்பட, பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். ஊர்வலத்தின்போது, கொச்சி- - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், புறவழிச் சாலை வழியே போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இதேபோல, சென்னையின் பல்வேறு இடங்களிலும், நேற்று, அய்யப்ப பக்தர்களின் கண்டன ஊர்வலம் நடந்தது.
உறுதிமொழி : பம்மல், ஸ்ரீ தர்ம சாஸ்தா குருவாயூரப்பன் கோவில் தலைவர் அரிகரன் கிருஷ்ணன் தலைமையில், 300க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள், கண்டன ஊர்வலம் சென்றனர். 100க்கும் மேற்பட்ட பெண்களும் பங்கேற்று, உறுதிமொழி எடுத்தனர். பிரார்த்தனைகளும் நடந்தன. ஆவடி, பேருந்து நிலையம் அருகே நேற்று காலை, சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் அமைப்பினர் அய்யப்ப சுவாமி உருவ படத்துடன் திரண்டனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வலியுறுத்தி, பக்தி கோஷமிட்டவாறு, பக்தவச்சலபுரத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு நடந்து சென்றனர். இதேபோல, டில்லி மற்றும், குஜராத் மாநிலம், ஆமதாபாதிலும் போராட்டங்கள் நடந்தன.
நாளை அவசர கூட்டம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான பிரச்னை மற்றும் அடுத்த மாதம் துவங்க உள்ள மண்டல மகரவிளக்கு பூஜை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க, திருவாங்கூர் தேவசம் போர்டின் அவசர கூட்டம், நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, சம்பந்தபட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.