பதிவு செய்த நாள்
16
ஜன
2019
01:01
தமிழ் மாதம் பன்னிரண்டில் ஆடிக்கும், தைக்கும் கூடுதல் சிறப்புண்டு. காரணம் சூரியன் தெற்கு நோக்கி நகரும் தட்சிணாயனத்தின் துவக்கம் ஆடி. சூரியன் வடக்கு நோக்கி நகரும் உத்தராயணத்தின் துவக்கம் தை. தையில் இருந்து பகல் பொழுதும், சூரியனின் உஷ்ணமும் அதிகரிக்கும். ஆனியில் இருந்து பகல் பொழுது குறைந்து, குளிர் அதிகரிக்கும். எனவே தான் குளிர் அதிகரிக்கும் காலத்தில் ’ஆடிப் பட்டம் தேடி விதை’ என்கின்றனர் பெரியோர்கள். பருவம் மாறும் தைமாதத்தில் அறுவடையை நடத்தினர். அதோடு விவசாயப்பணிக்கு உதவி புரிந்த சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவை தை முதல் நாளில் கொண்டாடினர்.
இதை மகர சங்கராந்தி என்றும், தைப்பொங்கல் என்றும் கொண்டாடுகிறோம். உழவுக்கும், உயிர்களின் வாழ்வுக்கும் ஆதாரமான சூரியனை வணங்கி, நன்றி செலுத்துகிற நாள் இந்நாள். தமிழர் திருநாள் என போற்றப்படும் இந்நாள், இந்தியா மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், ஐரோப்பா, வடஅமெரிக்காவில் உள்ள தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் அன்று புத்தாடை உடுத்தி புதிய மண்பானையில், அறுவடையில் கிடைத்த புத்தரிசியில் பொங்கல் வைப்பர்.
புதுமண் அடுப்பில் பானை வைத்து அதில் பால் விட்டுக் காய்ச்சுவர். பால் பொங்கி வரும் போது குடும்பத்தினர் ஒன்றுகூடி ’பொங்கலோ பொங்கல்’ என உற்சாகமாக ஒலி எழுப்புவர். அதன் பின் அரிசி, வெல்லம் சேர்த்து பொங்கல் தயாரித்து, கண்கண்ட தெய்வமான சூரியனுக்குப் படைப்பர். நவக்கிரகங்களின் சுழற்சியே நம்மை எல்லாம் ஆட்டுவிக்கின்றன. சூரியன் (ஞாயிறு), சந்திரன் (திங்கள்), அங்காரகன் (செவ்வாய்), புதன், குரு(வியாழன்), சுக்கிரன் (வெள்ளி), சனைச்சரன் (சனி), ராகு, கேது ஆகியன நவக்கிரகங்கள். இதில் முதன்மையானவர் சூரியன். ’ராஜ கிரகம்’ என இவரை ஜோதிடர்கள் குறிப்பிடுவர்.
அர்க்கன், கதிரவன், கமல நாயகன், கனலி, ஞாயிறு, தினகரன், பகலவன், பரிதி, பானு, மார்த்தாண்டன், வெய்யோன் என இவருக்கு பல பெயர்கள் உண்டு.
சூரியன் கம்பீரமாக வலம் வரும் தேருக்கு ஒற்றைச் சக்கரம் தான். அத்தேரை ஏழு குதிரைகள் இழுக்கின்றன. ஏழும் வெவ்வேறு நிறம் கொண்டவை. தேரோட்டும் சாரதியின் பெயர் அருணன்! மழை, வெயில் எல்லாவற்றுக்கும் காரணம் சூரியனே. அவரிடம் இருந்து பெறும் ஒளியால் தான் மண்ணில் தாவரங்கள் உயிர் வாழ்கின்றன. அவை தரும் காய், கனிகள் மூலமாக மற்ற உயிர்கள் மண்ணில் வாழ்கின்றன. சூரியனுக்கு ஞாயிற்றுக்கிழமையில் விரதமிருந்தால், நன்மைகள் உண்டாகும். சூரியனுக்குரிய கோயில்களில் முதன்மையானது கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவிலுள்ள சூரியனார் கோவில். சூரியன் தவிர, ஏனைய எட்டு கிரகங்களுக்கும் தனி சன்னதிகள் உள்ளன. இக்கோயிலை தரிசித்தால் நவக்கிரகங்களின் அருளை பெற முடியும். தென்னிந்தியாவில் சூரியனுக்கு தனிக்கோயில் இருப்பது இங்கு மட்டுமே. இக்கோயிலை தரிசிக்கும் முன், கிரகங்களுக்கு ஆசி புரிந்து ஆட்கொண்ட திருமங்கலக்குடி பிராணநாதரையும் மங்கல நாயகியையும் தரிசிக்க வேண்டும். சூரியனார்கோவிலுக்கு மிக அருகில் இக்கோயில் உள்ளது. மற்ற தலங்களில் வழிபடுவதற்கும், சூரியனார் கோவிலில் நவக்கிரகங்களை வழிபடுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. திருமங்கலக்குடியை தரிசித்தபின், சூரியனார்கோவிலுக்கு வர வேண்டும். இங்குள்ள பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள கிழக்கு நோக்கி அருளும் கோள் தீர்த்த விநாயகரை வழிபட வேண்டும். பின் உஷாதேவி, பிரத்யுஷாதேவியுடன் அருள்புரியும் சூரியனை வழிபட்டு, பின் கருவறைக்கு எதிரிலுள்ள குரு, மூன்றாவதாக சனி, தொடர்ந்து புதன், அங்காரகன், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு என்ற வரிசைப்படி வழிபட்டு நிறைவாக தேஜ சண்டேஸ்வரரை வழிபட வேண்டும்.
தினமும் சூரிய நமஸ்காரம் செய்தால் உடல்நலன் மேம்படும். சூரியனுக்குரிய காயத்ரி, ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகங்களை சொல்வது நல்லது. ராமர் போரில் வெற்றி பெற அகத்தியரால் உபதேசிக்கப்பட்ட ஆதித்ய ஹ்ருதயம் மிக விசேஷமானது. ’சூரியனை வழிபட்டால் உடல் நோய் மட்டுமன்றி, மன நோயும் அகலும். எதிரி பயம் நீங்கும். வெற்றி நம் வசமாகும்’ என்கிறது ஆதித்ய ஹ்ருதயம். சூரியனை வழிபட்டால் பார்வையில் தெளிவு பிறக்கும். தலைமைப் பதவி கிடைக்கும். எதைக் கண்டும் அஞ்சாத நெஞ்சுரம் அமையும். பொங்கல் நன்னாளில் சிவாலயங்களில் உள்ள சூரியபகவானுக்கு தீபமேற்றி வழிபட்டு வளம் பெறுங்கள்!