பதிவு செய்த நாள்
07
மே
2019
05:05
ஒவ்வொரு ஊரிலும் அமைந்துள்ள கோயில்களில் முறையாகப் பராமரிப்பதும், அந்த கோயில்களில் ஒவ்வொரு நாளும் தவறாது பூஜைகள் நடைபெறுவதும். வருடா வருடம் திருவிழாக்கள் நடத்தப்படுவதும். அந்த ஊர் எல்லைக்குட்பட்ட மனிதர்கள், மிருகங்கள், பக்ஷிகள் போன்ற அனைத்து உயிர்களுக்கும், அந்த பகுதியிலுள்ள நிலத்துக்கும், நன்மையை ஏற்படுத்தும். காலத்தில் மழை போன்ற நன்மைகளை ஏற்படுத்தி, புயல்காற்று அதிக மழை போன்ற பாதிப்புகளிலிருந்து அந்த ஊரை பாதுகாக்கும். ஆகவே, ஒவ்வொரு ஊரிலும் வசிக்கும் மக்கள், தனது ஊர், தங்கள் கோயில் என்னும் சொந்த உணர்வுடன், ஈடுபாட்டுடன் இவற்றைச் செய்ய வேண்டும்.
அதற்காகத்தான் திருவிழா துவங்கும் நாளன்று த்வஜஸ்தம்பம் என்னும் கொடிமரத்தில் கொடி ஏற்றி, அவ்வூரிலுள்ள மக்கள் சார்பாக அவ்வூரிலுள்ள பெரியோர் கையில் காப்பு என்னும் கயிற்றைக் கட்டிவிடுவார்கள். (ஊர் பெரியவர் யாரும் இல்லை என்றால் அர்ச்சகரே தன் கையில் காப்பை கட்டிக் கொள்வார்.) நாங்கள் சுத்தமானவர்களாக, ஒற்றுமையாக இருந்து ஆகம முறைப்படி இந்த கோயிலின் திருவிழாவை முடிந்தவரை சிறப்பாக நடத்துகிறோம். என்னும் உறுதி ஏற்பதற்கு சமமானது இது. தெய்வ சன்னிதியில் ஏற்கப்பட்ட இந்த உறுதிமொழியை முக்கியமாகக் காப்பாற்ற வேண்டும்.
அவ்வாறே, ஊர் மக்கள் சார்பாக யாரோ சிலர் (உறுதி மொழி ஏற்று) காப்புக் கயிற்றை தங்கள் கையில் கட்டிக்கொண்டு விட்டால், அதாவது கோயிலில் திருவிழாவுக்காக கொடி ஏற்றப்பட்டு விட்டால், அதுமுதல் கோயில் திருவிழா நடந்து முடிந்து. ஏற்றிய கொடி கீழே இறக்கப்பட்டு கையில் கட்டிய காப்பு அவிழ்க்கப்படும் வரை, அந்த ஊர் எல்லையைத் தாண்டி அந்த ஊர் மக்கள் செல்லக்கூடாது.
ஊர் எல்லையைத் தாண்டாமல் சிரத்தையுடன் இருந்து, திருவிழாவை நடத்தும், கலந்துகொள்ளும் குடும்பத்தினருக்கு, அவை சிறப்பாக அருள் வழங்கும். ஊர் எல்லையைத் தாண்டி அதாவது, திருவிழாவில் தெய்வ காரியத்தில் ஈடுபடாமல், தனது சொந்த வேலைகளைச் செய்ய முயற்சிக்கும், மனிதர்களிடம் கோபித்துக் கொள்ளும்.
ஆகவே, திருவிழா ஆரம்பித்து விட்டதைக் குறிக்கும் விதமாக கோயில் நடத்தப்படும் கொடியேற்றுதல் நிகழ்ச்சிக்குப் பின்னர், திருவிழா முடிவுற்றதைக் குறிக்கும் கோயில் கொடி இறங்கும் வரையில் அவ்வூர் எல்லைக்குள் வசிக்கும் மக்கள், அந்த ஊர் எல்லையைத் தாண்டிச் செல்லாமல் இருப்பது சிறப்பானது.
அவ்வாறு திருவிழா நடக்கும் நாட்களுக்குள் ஊர் எல்லையைத் தாண்டி வெளியூர் செல்ல வேண்டியதாக இருந்தால், திருவிழா முடியும் முன்பாக ஊருக்குத் திரும்பி விட வேண்டும். அல்லது கோயிலில் கொடியேற்றம் நடக்கும் சமயம் அந்த ஊர் எல்லைக்குள் இல்லாமல், ஊருக்கு வெளியே சென்று விட்டு, கொடியேற்ற நிகழ்ச்சி முடிந்த பிறகு ஊருக்குள் வந்து விடாலம். இது ஒருவிதத்தில் சற்று ஆறுதலாக அமையும்.