பதிவு செய்த நாள்
27
டிச
2019
12:12
சேலம்: பெருமாள் கோவில்களில், திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கியது. சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா, திருநெடுந்தாண்டகத்துடன் நேற்று தொடங்கியது. அதற்காக மூலவர், உற்சவர், ஆழ்வார், ஆச்சாரியார் திருமேனிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
மாலையில், திருமங்கை மன்னன் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகம் என்ற பாசுரத்தை, பிரபந்த கோஷ்டியார்கள், பாராயணம் செய்து, வைகுண்ட ஏகாதசி திரு விழாவை முறைப்படி தொடங்கிவைத்தனர். இதையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜர் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று முதல், பகல்பத்து உற்சவம் தொடங்கவுள்ளது. ஜன., 5ல் நாச்சியார் திருக்கோலம் எனும் மோகினி அலங்காரத்தில் பெருமாள் தரிசனம் அளிப்பார். மறுநாள் காலை, 5:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறப்பு நடக்கும். அன்றிரவு முதல், ராப்பத்து உற்சவம் தொடங்கி, 10 நாள் நடக்கும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர். இதேபோல், சேலம், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள், உத்தம சோழபுரம் அழகிரிநாத பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கியது.