பதிவு செய்த நாள்
27
டிச
2019
12:12
சென்னிமலை: தம்பிராட்டி அம்மன் கோவில் பொங்கல் விழாவில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சென்னிமலை அருகே, ஈங்கூர் கிராமத்தில், தம்பிராட்டி அம்மன் கோவில் உள்ளது. கொங்கு வேளாள கவுண்டர்களின் ஒரு பிரிவான ஈஞ்சன் குலத்தினரின் குலதெய்வமான இக்கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா, கடந்த, 10ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது, இதையடுத்து, 17ல் காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து குதிரை துலுக்கு கேட்டல் மற்றும் அம்மை அழைத்தல், தீர்த்த ஊர்வலம் நடந்தது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் நேற்று நடந்தது. ஈங்கூர் மட்டுமின்றி கோவிலுக்கு பாத்தியப்பட்ட, அவினாசி, திருப்பூர், கோவை, கோபி, பொள்ளாச்சி, சேலம், பழநி பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கோவில் வளாகத்தில் நூற்றுக்கணக்கானோர் பொங்கல் வைத்தும், மாவிளக்கு வைத்தும் அம்மனை வழிபட்டனர். விழாவில் இளைஞர்கள் சலங்கை ஆட்டம், பெண்கள் கும்மியாட்டம் ஆடினர். காலை முதல் மாலை வரை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவு பெறுகிறது.