பதிவு செய்த நாள்
27
ஜூலை
2020
11:07
பெங்களூரு : “அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கு, ஹிந்துக்கள் மட்டுமின்றி, பிற மதத்தினரும் நன்கொடை வழங்கலாம்; அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்,” என, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர், விஷ்வ பிரசன்ன தீர்த்த ஸ்வாமி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவிலை கட்ட, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது.ராமர் கோவிலின் அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 5ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்த அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த அந்த கூட்டத்தில், அறக்கட்டளையின் உறுப்பினரும், உடுப்பியில் உள்ள பேஜாவர் மடத்தின் தலைவருமான விஷ்வ பிரசன்ன தீர்த்த ஸ்வாமி பங்கேற்றார்.
இந்நிலையில், அந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து, அவர் நேற்று கூறியதாவது:ராமர் கோவில் கட்டுமானத்திற்காக, நாட்டு மக்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும், 10 ரூபாயும், ஒவ்வொரு குடும்பத்திடம் இருந்தும், 100 ரூபாயும் நன்கொடையாக கேட்கலாம் என, அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. அது வெறும் பரிந்துரை தான்; வரியை போல் அல்ல. கோவில் கட்டுமானத்திற்கு பங்களிப்பு நல்க விரும்பும் மக்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.ராமர் மீது நம்பிக்கையும், பக்தியும் உள்ள யார் வேண்டுமானாலும், நன்கொடை அளிக்கலாம். நன்கொடை வழங்குவோர், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என, எந்த விதியும் இல்லை. ஹிந்துக்கள் மட்டுமின்றி, பிற மதத்தை சேர்ந்தவர்கள் நன்கொடை வழங்கினாலும், அதை எந்த ஆட்சேபனையும் இன்றி ஏற்றுக் கொள்வோம். 1 ரூபாய், 1 கோடி ரூபாய் என, எவ்வளவு இருந்தாலும் சரி, அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.