பதிவு செய்த நாள்
26
ஜூலை
2020
11:07
அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, 5ம் தேதி நடக்க உள்ள நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று அயோத்திக்கு சென்றார்.
விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த முதல்வர், மக்களின்,500 ஆண்டு கால கனவு நனவாக உள்ளது, என்றார்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு, நவம்பரில் அனுமதியளித்தது. இதையடுத்து, மத்திய அரசு, கோவில் கட்டுவதற்காக, கடந்த பிப்ரவரியில், ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளையை அமைத்தது.
இந்நிலையில், அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, வரும், 5ம் தேதி நடத்த, அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. ஏற்பாடுவிழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல்லை நாட்டுகிறார், விழாவில், பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் உட்பட, 200 பேர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகளை, அறக்கட்டளை செய்து வருகிறது. அயோத்தி முழுதும், ஆங்காங்கே ராட்சத திரைகள் அமைக்கப்பட்டு, பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பொது மக்கள், சமூக இடைவெளியை கடைப்பிடித்து பார்க்கலாம் என, அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், யோகி ஆதித்யநாத், நேற்று அயோத்தி சென்றார். ராமர் கோவிலில் இருந்த, லஷ்மண், பரத் மற்றும் சத்ருகன் சிலைகளை, புதிய இடங்களில் மாற்றுவதற்காக நடத்தப்பட்ட பூஜையில் பங்கேற்றார்.பின், அயோத்தியில் உள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்துக்கு சென்ற முதல்வர், அறக்கட்டளை நிர்வாகிகளுடன், அடிக்கல் நாட்டு விழா குறித்து ஆலோசனை நடத்தினார். இதன்பின், யோகி ஆதித்யநாத் கூறுகையில், அடிக்கல் நாட்டு விழாவில், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும். மக்களின், 500 ஆண்டு கால கனவு நனவாக உள்ளது, என்றார்.
வெள்ளி செங்கல்: விழா குறித்து, அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:ராம ஜன்ம பூமி வளாகத்தில் நடைபெறும் பூமி பூஜை விழாவுக்கு முன், மூன்று நாட்கள், வேத மந்திரங்கள் முழங்க, சடங்குகள் நடைபெறும். பூமி பூஜையின் போது, கோவில் கருவறை அமையும் பகுதியில், 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல்லை அடிக்கல்லாக, மோடி நடுவார்.ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக, 1988-ல் வடிவமைக்கப்பட்ட வரைபடத்தில், தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.அப்போது கோவிலின் உயரம், 141 அடியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இப்போது, 20 அடி உயர்த்தி, 161 அடியாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இரண்டு மண்டபங்கள் அமைக்கப்பட உள்ளன. கோவில் பணிகள் முடிவடைய, மூன்று ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
தீபாவளி விழா: ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை, உத்தர பிரதேச மாநிலம் முழுதும் தீபாவளி பண்டிகை போல் கொண்டாட, விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்துள்ளது. இது பற்றி, விஸ்வ ஹிந்து பரிஷத் செய்தி தொடர்பாளர், ஷரத் ஷர்மா கூறியதாவது:ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை, தீபாவளி போல் மக்கள் கொண்டாட வேண்டும் என, துறவியர் பலரும் வலியுறுத்தியுள்ளனர். இதையொட்டி, அயோத்தியில், ஆகஸ்ட், 5ம் தேதியன்று அனைத்து கோவில்களிலும் அகல் விளக்குகள் ஏற்றப்படும். கோவில்களில், சிறப்பு பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் மற்ற பகுதிகளில், வீட்டு வாசலிலும், கோவில்களிலும் அகல் விளக்குகளை ஏற்றி, தீபாவளி போல், அடிக்கல் நாட்டு விழாவை கொண்டாட, மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். மாநிலம் முழுதும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளோம்.ராமர் கோவில் சிறப்பாக கட்டி முடிக்க, கிராமங்கள் தோறும், பரிஷத் சார்பில், சிறப்பு பூஜைகள் செய்யப்படும். கோவிலுக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, கட்டப்படும் கோவில் பற்றிய விபரங்கள் ஆகியவை அடங்கிய கையேடு, மக்களிடம் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.