பதிவு செய்த நாள்
04
ஆக
2020
09:08
அயோத்தி: மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, ராமர் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை விழா, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், நாளை நடக்க உள்ளது. இதையொட்டி, அயோத்தி நகர் உட்பட மாநிலம் முழுதும், லட்சக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உ.பி., மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கட்டலாம் என, உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு தீர்ப்பு அளித்தது. அதையடுத்து, மிக பிரமாண்ட அளவில் அமைய உள்ள ராமர் கோவிலுக்கான பூமி பூஜையை, நாளை நடத்த நாள் குறிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
விழாக்கோலம் பூண்டது அயோத்தி: பூமி பூஜையை முன்னிட்டு, பல்வேறு பூஜைகள், யாகங்கள் உள்ளிட்டவை நேற்று துவங்கின. தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு இந்த பூஜைகள் நடைபெற உள்ளன.கவுரி கணபதி பூஜையுடன், பூமி பூஜை நிகழ்ச்சி, நேற்று துவங்கியது. காசி, காஞ்சி, டில்லியில் இருந்து வந்திருந்தோர், இந்த பூஜைகளை செய்தனர்.
இந்நிலையில், பூமி பூஜையை ஒட்டி, அயோத்தி நகரில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள, அகல் விளக்குகளை ஏற்றுவதற்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, எட்டாஹ், கன்னோஜ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அவர் தேர்ந்தெடுத்த, ஒரு லட்சம் அகல் விளக்குகள், அயோத்திக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதைத் தவிர, லட்சக்கணக்கான விளக்குகளை ஏற்றுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அயோத்தியை தவிர, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விளக்குகள் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வீடு, அலுவலகங்கள், பா.ஜ., அலுவலகங்களிலும், விளக்குகள் ஏற்றப்படுகின்றன. கடந்த, 2017ல், தீபாவளியின் போது, அயோத்தியின் சரயு நதிக்கரையில், 1.7 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன. கடந்தாண்டு, 5.5 லட்சம் விளக்குகள் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டது, கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றது. வழக்கமாக தீபாவளியின் போது, தீபோற்சவம் என்ற பெயரில், விளக்குகள் ஏற்றப்படும். தற்போது, ராமர் கோவிலுக்கான பூமி பூஜையையும், தீபத் திருநாளாக கொண்டாட வேண்டும் என, யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல் அழைப்பு: பூமி பூஜைக்கான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. காவி நிறத்தின் பின்னணியில் அமைந்துள்ள அந்த அழைப்பிதழில், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. விழா மேடையில், இவர்களுடன், ராமர் கோவில் கட்டுமான குழுவைச் சேர்ந்த, மகந்த் நிருத்ய கோபால்தாஸ் மட்டுமே இடம் பெறுவார்.
விழாவுக்கு, 200 பேரை அழைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது, 170 பேரை மட்டுமே அழைக்க, விழாக் குழுவினர் முடிவு செய்து உள்ளனர். அயோத்தி நிலம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான, இக்பால் அன்சாரிக்கு, முதல் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. முதல் அழைப்பிதழை நான் பெற வேண்டும் என்பது கடவுள் ராமரின் விருப்பமாக இருக்கும் என, நினைக்கிறேன்; அதனால், அதை ஏற்றுக் கொண்டேன், என, இக்பால் அன்சாரி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
உமா பாரதி பங்கேற்கவில்லை: ராமர் கோவில் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உமா பாரதி, பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், உமா பாரதி கூறியுள்ளதாவது: உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல மூத்த தலைவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பூமி பூஜையில் நான் கலந்து கொள்ளத் தயாராக இல்லை. நிகழ்ச்சியில் பங்கேற்போர் குறித்து கவலைப்படுகிறேன், குறிப்பாக, பிரதமர் மோடி குறித்து கவலைப்படுகிறேன். நான் கண்டிப்பாக, அயோத்தி செல்வேன். பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி முடிந்தவுடன், பூமி பூஜை நடந்த பகுதிக்கு செல்வேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
ராமருக்கு நவரத்தின ஆடை: அயோத்தியைச் சேர்ந்த, சங்கர்லால், பகவான்லால் சகோதரர்கள் தான், ராமருக்கு உடைகள் தைத்து வருகின்றனர். இவர்களுடைய தந்தை பாபுலால், 1985ல் இருந்து ராமருக்கு உடைகளை தைத்து வந்தார். ராமருக்கு தேவையான உடைகளை, அவருக்கு முன்பாகவே வடிவமைத்து, இந்த சகோதரர்கள் தைத்து தருவர். தற்போது, பூமி பூஜையை முன்னிட்டு, குழந்தை ராமருக்கு பச்சை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இரண்டு உடைகள் தைக்கப்பட்டுள்ளன. இவற்றில், தங்க நுாலால் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளி வெற்றிலை: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த, சவுராசியா பிரிவினர், நன்கொடையாக அளித்துள்ள, ஐந்து வெள்ளியிலான வெற்றிலை, பூமி பூஜையில் பயன்படுத்தப்பட உள்ளது. ஹிந்து பூஜைகளில், வெற்றிலையை வைப்பது மங்களகரமாக கருதப்படுகிறது. அதன்படி, சவுராசியா பிரிவினர், வெள்ளியிலான வெற்றிலையை நன்கொடையாக அளித்துள்ளனர். இவற்றை, வித்வத் பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள், அயோத்திக்கு எடுத்துச் செல்கின்றனர். தங்கத்திலான நாகம், காசி விசுவநாதர் கோவிலில் இருந்து சந்தனம், வெள்ளியிலான ஆமை ஆகியவற்றையும் இவர்கள் எடுத்துச் செல்கின்றனர். இவையும், பூஜைகளில் பயன்படுத்தப்பட உள்ளன.
ராமருக்கு கற்கோவில்: கோவில் கட்டுமானம் குறித்து நிர்வாகிகள் கூறியதாவது: ராமருக்கான கோவிலில், இரும்பு கம்பிகள், மரம், தாமிரம், வெள்ளை சிமென்ட் ஆகியவை பயன்படுத்தப்படாது. பல நுாற்றாண்டுகள் நிலைத்து இருக்கும் என்பதால், முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே அமைக்கப்படும். இதற்கு தேவையான கற்கள் ஏற்கனவே அயோத்தியில் உள்ளன. கூடுதலாக தேவைப்படும் கற்கள், ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட உள்ளன. பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகியவை, கோவிலுக்கான அஸ்திவாரத்தில் பயன்படுத்தப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
சிவசேனா ரூ.1 கோடி: ராமர் கோவில் கட்டுமானத்துக்கு, சிவசேனா கட்சி, 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. மஹாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: கட்சியின் நிறுவனரும், என் தந்தையுமான பால் தாக்கரே, ராமர் கோவில் கட்டுவதற்கு, 1 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக கூறியிருந்தார். அவருடைய அழைப்பை ஏற்று, ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கத்தில், ஆயிரக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் பங்கேற்றனர். பால் தாக்கரேயின் உறுதிமொழி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
முதல்வர் ஆய்வு: பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் குறித்து, முதல்வர், யோகி ஆதித்யநாத், நேற்று நேரில் ஆய்வு செய்தார். அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை செய்தார்.
பின், அவர் கூறியதாவது: ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற, 500 ஆண்டு கால கனவு விரைவில் நிறைவேற உள்ளது. பூமி பூஜை என்பது அந்த கனவை செயல்படுத்துவதற்கான துவக்கம். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க, அதே நேரத்தில், உணர்வு பூர்வமான நிகழ்வாகும். இது புதிய இந்தியாவுக்கான துவக்கம். அழைப்பு பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நாட்டின், 135 கோடி மக்கள் சார்பில், பிரதமர், மோடி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதனால், மற்றவர்கள், அயோத்திக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.