பதிவு செய்த நாள்
03
செப்
2020
10:09
அயோத்தி : அயோத்தியில் கட்டப் பட உள்ள ராமர் கோவிலுக்கான வரைபடத்துக்கு, அயோத்தி மேம்பாட்டு ஆணையம், நேற்று ஒப்புதல் அளித்தது. உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், 70 ஏக்கர் நிலப்பரப்பில், ராமர் கோவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. கோவில் கட்டுமானப் பணிகள் குறித்து, அறக்கட்டளை உறுப்பினர்கள், கடந்த மாதம், 20ல், டில்லியில் சந்தித்து, விரிவான ஆலோசனை நடத்தினர். கோவில் கட்டும் பணி, 36 முதல், 40 மாதங்களுக்குள் நிறைவடையும் என, கூறப்படுகிறது.
தடையில்லா சான்றிதழ்: இந்நிலையில், கோவில் கட்டுமானத்துக்கு, முறையான அனுமதி பெற, அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம், கோவில் வரைபடம் ஒப்படைக்கப்பட்டது. ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான, டாக்டர் அனில் மிஸ்ரா, வரைபடம் மற்றும் ஆவணங்களை, ஆணையத்தின் துணை தலைவரிடம், சில நாட்களுக்கு முன் வழங்கினார். அனுமதி பெறுவதற்கு, 65 ஆயிரம் ரூபாய் கட்டணமும் செலுத்தப்பட்டது. இதையடுத்து, அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் கூட்டம், நேற்று நடந்தது. இதில், ராமர் கோவில் வரைபடத்துக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது பற்றி ஆணையத்தின் கமிஷனர் அகர்வால் கூறியதாவது: ராமர் கோவில் வரைபடம் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வருவாய், நகராட்சி நிர்வாகம், சுற்றுச்சூழல் உட்பட, ஒன்பது துறைகள், வரைபடத்துக்கு தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்கின. விரைவில் துவங்கும்இதையடுத்து, வரைபடத்துக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார். அயோத்தி மேம்பாட்டு ஆணையம், வரைபடத்துக்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, கோவில் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மசூதியை வடிவமைக்கும் பேராசிரியர்: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், அயோத்தியில் மசூதி கட்ட, 5 ஏக்கர் நிலம் வழங்க, உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து அயோத்தி, தானிப்பூர் கிராமத்தில், 5 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்பு வாரியத்திடம், உ.பி., அரசு வழங்கியது. இந்நிலையில், 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட உள்ள மசூதியை, ஜாமியா மிலியா பல்கலையின் கட்டட கலைத் துறையின் தலைவர், பேராசிரியர் எஸ்.எஸ்.அக்தர் வடிவமைக்க உள்ளதாக, பல்கலை செய்தி தொடர்பாளர் அகமது ஆசிம் தெரிவித்துள்ளார். மசூதி, இந்திய - இஸ்லாமிய ஆய்வு மையம், நுாலகம், மருத்துவமனை ஆகியவை, 5 ஏக்கர் நிலத்தில், கட்டப்படும் என, சன்னி வக்பு வாரியம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இது பற்றி பேராசிரியர் அக்தர் கூறுகையில், மசூதி மட்டுமின்றி, 5 ஏக்கர் நிலத்தில் அமைய உள்ள அனைத்து கட்டடங்களையும், நான் வடிவமைக்க உள்ளேன் என்றார்.