கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவம் நேற்று நடந்தது.
திருப்பதியின் ஏற்றம் கொண்ட கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவம் நேற்று மாலை நடந்தது. வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 25ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடந்த ராப்பத்து நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது.இதனையொட்டி நேற்று மாலை நம்மாழ்வார் மோட்ச உற்சவம் நடந்தது. பெருமாள், தாயார், ஆழ்வார்கள் உற்சவர்களுக்கு திருமஞ்சனம், அபிஷேகங்கள் செய்து, சிறப்பு அலங்காரத்துடன் மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து சாற்றுமுறை, சேவை, வேதபாராயணம், ஆராதனைகள் நடந்தது. கோவில் குருக்கள் தேசிகபட்டர் பூஜைகளை செய்து வைத்தார்.