அன்னூர்: நல்லிசெட்டிபாளையம், பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காரேகவுண்டன்பாளையம் ஊராட்சி, நல்லிசெட்டிபாளையத்தில் பழமையான பட்டத்தரசி அம்மன் மற்றும் சக்தி மதுரை வீரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல திருப்பணிகள் செய்யப்பட்டதையடுத்து, நேற்று முன்தினம் விநாயகர் வழிபாடுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரவு கோபுர கலசம் நிறுவுதலும், வேத பாராயணமும் நடந்தது.
அதிகாலையில் இரண்டாம் கால யாக பூஜையும், 108 வகை திரவியங்கள் சமர்ப்பித்தல் நடந்தது. காலை 9:30 மணிக்கு கோபுரத்திற்கும், விநாயகர் மற்றும் மூலஸ்தான அம்மனுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் ஊராட்சித் தலைவர் சாந்தி நடராஜன், கூட்டுறவு சங்க தலைவர் சாய் செந்தில், ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால் உள்பட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளானவர்கள் பங்கேற்றனர்.