செஞ்சி; மேலச்சேரி ஆதிஅங்காளம்மன் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி அடுத்த மேலச்சேரி கிராமத்தில் புதிதாக ஆதி அங்காளம்மன் கோவில் கட்டப்பட்டது. இதற்கான மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், கும்ப பிரதிஷ்டை மற்றும் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது.நேற்று காலை கோபூஜை, தம்பதி பூஜை, மகாசங்கல்பம், நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 9.45 மணிக்குகோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. பின்னர், அங்காளம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.மேலச்சேரி பிரஹன்னா நாயகி சமேத மத்தளேஸ்வரர் கோவில் அர்ச்சகர் ராமச்சந்திர அய்யர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாக வேள்விகளை நடத்தினர். மேலச்சேரி கிராம பர்வதராஜகுல மீனவ சமூகத்தினர் மற்றும் கிராம மக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.