மகாபாரதம் படிப்பதும் கேட்பதும் புண்ணியம்: எழுத்தாளர் இந்திராசெளந்தர்ராஜன் பேச்சு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2021 06:04
மதுரை: மகாபாரதம் படிப்பதும், கேட்பதும் பெரும் புண்ணியம் என்ற கருத்து காலம் காலமாக நிலவி வருகிறது, என மதுரையில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் நடந்த தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்வில் எழுத்தாளர் இந்திராசெளந்தர்ராஜன் பேசினார்.
தெரிந்த பாரதம், தெரியாத பாத்திரம் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: மகாபாரதம் ஐந்தாவது வேதம் என போற்றப்படுகிறது. இதனுள் மனித வாழ்வின் அத்தனை வண்ணங்களும் உள்ளன. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும். எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும். துரோகம் செய்தால் என்னவாகும். தர்மம் செய்தால் என்ன நடக்கும் என்பது போன்ற பல நுாறு கேள்விகளுக்கு மகாபாரதத்தில் தெளிவாக விடைகள் உள்ளன. இதனால் தான் மகாபாரதம் படிப்பதை பூஜை செய்வதற்கு இணையாக சான்றோர்கள் கருதினர்.இந்த மகாபாரதத்தில் பல நுாறு பாத்திரங்கள் உள்ளன. பீஷ்மர், விதுரர், வசிஷ்டர், அம்பை, இடும்பி, அங்கார பர்ணன் போன்ற பல பாத்திரங்கள் பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களுக்கு இணையானவர்கள். இவர்களை தெரிந்து கொள்ளும் போது மகாபாரதம் சுவை மிகுந்த ஒரு வழிகாட்டி நுால் என தெரிய வரும், என்றார். ஏற்பாடுகளை நிறுவனர் நெல்லைபாலு செய்திருந்தார்.