பதிவு செய்த நாள்
27
ஆக
2021
04:08
அவிநாசி: தஞ்சையில் உள்ள அய்யனார் கோவிலுக்கு, திருமுருகன்பூண்டியில் உள்ள சிற்ப கலை கூடத்தில் கருங்கல்லால் ஆன, யானை, குதிரை சிற்பம் செதுக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு புதுாரில், யானை மேல் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கான யானை மற்றும் குதிரை சிற்பங்கள், அவிநாசி அருகே, திருமுருகன்பூண்டியில் உள்ள சிற்பக்கலை கூடத்தில் செதுக்கப்பட்டுள்ளது. சிற்பி மணிகண்டன் கூறுகையில், "தஞ்சையில் உள்ள யானை மேல் அய்யனார் கோவில் பழமை வாய்ந்தது. இக்கோவில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது. கோவில் நிர்வாகத்தினரின் விருப்பத்திற்கேற்ப, ஊத்துக்குளி கருங்கல்லில், 60 டன் எடையில், 11 அடி உயரம், 10 நீளத்தில் யானை சிற்பம், 35 டன் எடையில், 10 அடி நீள, உயரத்தில் குதிரை சிற்பம் செதுக்கப்பட்டுள்ளன. ஆறு பேர் இப்பணியை செய்தனர். இன்று, (28ம் தேதி) இச்சிலைகளை, கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்க உள்ளோம், " என்றார்.