பதிவு செய்த நாள்
04
நவ
2021
05:11
பழநி: பழநியில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.
பழநி மலைக்கோயிலில் நவ.4 முதல் நவ.,10 வரை கந்த சஷ்டி விழா நடைபெற உள்ளது. பகல் 12.00 மணிக்கு உச்சிகால பூஜையில் மூலவர் ஞான தண்டாயுதபாணி சுவாமி, உற்சவர் சின்ன குமாரசாமி, சண்முகர், நவ வீரர்கள், துவாரபாலகர்கள், மயில்வாகனம் ஆகியவற்றுக்கு காப்புக் கட்டுதல் நடைபெற்றது. இதில் கோயில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், பழநி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியநாயகியம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் உள்ள கோவில் யானை கஸ்தூரி யானைப் பாதை வழியாக கந்தசஷ்டி விழாவிற்காக மலைக்கோயில் சென்றது. சூரசம்ஹாரம் நடைபெறும் நாள்வரை யானை கஸ்தூரி மலைக்கோயிலில் ஆறு நாட்கள் தங்கி இருக்கும். பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினன்குடி கோயில், மலைக்கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு பின் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை துவங்கினர்.
கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வாக நவ.9 அன்று மாலையில் கிரிவீதிகளில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். நவ.,10 காலையில் மலைக்கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகர் திருக்கல்யாண உற்ஸவமும், மாலையில் பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனா முத்துக்குமாரசாமி திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறும். சூரசம்ஹார நிகழ்வும், திருக்கல்யாண நிகழ்வும் வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். பக்தர்கள் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. விழா நிகழ்ச்சிகள் நடைபெறாத சமயங்களில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.