Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இடர் களையும் ஈசன் சந்திராஷ்டமத்தன்று திருமணம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நெஞ்சுக்கு நிம்மதி - ஆண்டவன் சந்நதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2022
05:02

 ஒவ்வொரு துன்பத்திற்கும் மூலமிருக்கிறது. ஏதோ ஒன்றின் தொடர்ச்சியே அது. அது போன ஜென்மத்தின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம்; இப்பிறப்பில் ஒரு கட்டத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிக்கு எதிரொலியாகவும் இருக்கலாம். காலிலே ஒரு முள் குத்துவதற்குக் கூட உனக்கு விதிக்கப்பட்ட விதி காரணமாக இருக்கிறது.

ஆகவே துன்பம் எத்தகையதாயினும் அது நீயே உண்டாக்கிக் கொண்டதாயினும், உன்னை உண்டாக்கும்படி துாண்டிய சக்தி ஒன்றிருக்கிறது. அந்த சக்தியிடம் விண்ணப்பித்துக் கொண்டால் பலன் கிடைக்கிறது. ‘‘எல்லாத் துன்பங்களுக்கும் விதி காரணமென்றால் நிலையானதும் நிரந்தரமானதுமான அந்த விதி பிரார்த்தனையின் மூலம் எப்படி மாறிவிடும்?’’ என்று ஒருவர் கேட்கிறார்.

ஓடிக் கொண்டிருக்கும் வெள்ளத்தை அணை கட்டி நிறுத்துவது போல், பிரார்த்தனை துயரங்களை நிறுத்துகிறது. இயற்கையாகவே அது ஒரு மனச்சாந்தியை உண்டாக்குகிறது. துன்பம் ஓரளவு குறைந்தாலும், பிரார்த்தனை பலனுள்ளதாகத் தோன்றுகிறது. நீ நம்பிக்கை வைக்கின்ற டாக்டர் மருந்துக்குப் பதிலாக வெறும் தண்ணீரையே ஊசிமூலம் ஏற்றினாலும் நோய் குறைந்துவிட்டதுபோல உனக்குத் தோன்றுகிறது. அப்படித் தோன்றுவதுதான் முக்கியம்.

அது தோன்றுவதற்கு நம்பிக்கைதான் பிரதானம். மருந்து பாதி, மனநம்பிக்கை பாதி! பிரார்த்தனை பாதி, நம்பிக்கை பாதி! நம்பிக்கையோடு பிரார்த்தித்தால் விதியின் வேகம் குறைந்து விட்டதாக உனக்கே தோன்றுகிறது. விரோதித்து நின்ற விதி, ஒத்துழைப்பதாகவும் தோன்றுகிறது. ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்று, ஒரு வரியில் சொல்லி வைத்தார்கள் நம்முடைய மூதாதையர்கள்.

நம்பிக்கையே வெற்றிக்கும் நிம்மதிக்கும் அடிப்படை. ஆதி மனிதன் கடலைக்கண்டு பயந்தான். அடுத்த மனிதன் கொஞ்ச துாரம் கடலுக்குள் நடந்து பார்த்தான். அவனுக்கு அடுத்தவன் நீந்திப் பார்த்தான். இன்னொருவன் கட்டையைப் பிடித்துக்கொண்டு பயணம் போனான். கட்டை, படகு ஆயிற்று; படகு கப்பலாயிற்று; பயணம் சுலபமாயிற்று. கடலும் கடக்கக்கூடியதே என்ற நம்பிக்கை வந்தது. உலகம் உருண்டை என்ற உண்மையும் தெரிந்தது.

விமானத்தின் பறக்கும் உயரத்தையும் வேகத்தையும் கொஞ்சங்கொஞ்சமாக அதிகப்படுத்திக்கொண்டே போன மனிதன், சந்திரமண்டலம் வரை பயணம் போகலாம் என்ற நம்பிக்கை கொண்டான். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. பையன் ஒழுங்காகப் படிப்பான் என்ற நம்பிக்கையால்தான், அவனை வெளியூரில் படிக்க வைத்துவிட்டு நிம்மதியாக இருக்கிறார் தந்தை. மனைவியைப் பிரிந்து வாணிபத்திற்காக வெளியூர் போகிறவன், திரும்பி வரும் வரை மனைவி பத்தினியாக இருப்பாள் என்ற நம்பிக்கையில்தான் போகிறான்.

இன்பமும் நிம்மதியும் நம்பிக்கையில்தான் தோன்றுகின்றன. நான் கடவுளிடம் நம்பிக்கை வைத்தது வீண் போகவில்லை. அதிலும் ஒருவனையே பற்றி நிற்பது என்று முடிவு கட்டிக்கொண்டு ‘சிக்கெனப் பிடித்தேன் தேவனே உன்னை’ என்று கண்ணனைப் பற்றி நிற்பது, பலனளித்தது. சிலருக்கு சக்தி நம்பிக்கை பலம் தருகிறது.

சிலருக்கு சிவநம்பிக்கை. சிலருக்கு முருக நம்பிக்கை. இன்னும் எத்தனையோ! நீ நல்ல தொழிலாளியாக இருந்தால் மோசமான முதலாளிகூட உன்னிடம் அன்பு காட்டுகிறான்; கருணை காட்டுகிறான். நீ நம்பிக்கையுள்ள பக்தனாக இருந்தால் குட்டித்தேவதைகள்கூட உன்னை ரட்சிக்கின்றன. துன்பங்களைக் களைவதற்கு நம்பிக்கையே முக்கியம்.

எனக்குத் தெரிந்தவரை...

முதன் முதலில் ஒரு பத்திரிகையில் போய் நான் சேர்ந்தபோது, ‘‘உனக்கு புரூப் பார்க்கத் தெரியுமா?’’ என்று கேட்டார்கள். உண்மையில் எனக்குத் தெரியாது. துணிந்து ‘தெரியும்’ என்று கூறி விட்டேன். அதற்கொன்றும் ‘டிப்ளமா’ தேவையில்லையே! நேரே அச்சகத்திற்குப் போனேன். முன்பு திருத்தப்பட்ட புரூப்களைப் பார்த்தேன். உடனே நானும் திருத்த ஆரம்பித்து விட்டேன். அந்தக் கலையில் எனக்கு வெகுநாளாகப் பயிற்சி இருப்பதுபோல் பத்திரிகையாளருக்குத் தோன்றிற்று.

பிறகு, ‘‘தலையங்கம் எழுதத் தெரியுமா?’’ என்றார்கள். ‘‘தெரியும்’’ என்றேன்; எழுதிவிட்டேன்! ‘‘அற்புதம்! அற்புதம்!’’ என்றார்கள். அதன் பலன், ஆசிரியருக்கு வேலை போய்விட்டது; நான் ஆசிரியராகி விட்டேன்! எதிலுமே நம்பிக்கை பலன் தருகிறது என்றால் அத்துன்பங்களைக் களையத் தெய்வ நம்பிக்கை பலன் தராதா?

‘‘நம்பினோர் கெடுவதில்லை; நான்கு மறை தீர்ப்பு’’ என்றார்கள். உண்மையில், நம்பிக்கை என்பது இயற்கையாகவோ செயற்கையாகவோ வெற்றி பெற்று விட்டதுபோல் தோற்றமளித்து, நிம்மதியைத் தருகிறது. சீதை இலங்கையிலிருந்த போது, ‘ராமன் வருவான்’ என்று நம்பினாள். ராமனும், ‘சீதையைக் காண்போம்’ என்று நம்பினான். ராவணனும் ‘ராமன் வரத்தான் போகிறான்’ என்று எதிர்பார்த்தான்.

அந்த நம்பிக்கை ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்ததாலே ஏற்பட்ட நம்பிக்கை. தெய்வத்தை நம்பும்போது அறிந்து நம்ப வேண்டும். ஏதோ கஷ்டம் வந்துவிட்டது, கோயிலுக்குப் போய் வருவோம் என்று போய் வருவதில் அர்த்தமில்லை. அறிவு ஒரு சக்தியின் மீது லயித்து நம்பிக்கை உதயமாக வேண்டும். அதற்குப் பகுத்தறிவு தேவையில்லை. ‘இந்தத் தெய்வம் நம்மைக் காப்பாற்றும்’ என்று உனக்கே தோன்றி, அந்த லயத்தில் நம்பிக்கை பிறக்க வேண்டும்.

உலகத்தில் பகுத்து அறிய வேண்டிய விஷயங்கள் சில உண்டு. அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு. மனைவியின் உள்ளத்தை நீ பகுத்தறிய முயலலாம். உடலைப் பகுத்தறிய முயன்றால் அவள் அழகு தெரியாது. எலும்பும் சதையும்தான் தோன்றும். ஸ்துாலங்களைப் பகுத்தறிந்தால் அவை வெறும் கல்லும் செம்புமாகத் தோன்றும்.

அப்படியே ஏற்றுக்கொண்டால் அந்த சக்தி உன்னை ஆகர்ஷிக்கும். நம்பிக்கை கொண்டவர்களை அந்தச் சக்தி எப்படியும் ஒரு கட்டத்தில் வாழ வைக்கும். மனிதனின் பலவீனமான மனத்தை அறிந்து தான் இந்துக்கள் நம்பிக்கையோடு வழிபடுவதை வற்புறுத்தினார்கள். எத்தகைய துயரங்களிலிருந்தும் விடுபடுவதற்கு வழி சொன்னார்கள். ஒவ்வொரு சிருஷ்டியிலும் சிக்கல் இருக்கிறது என்பதை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். அந்தச் சிக்கல்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கே ஒவ்வொரு ஜீவனும் வாழ்க்கையை நடத்துகிறது.

ஆகவே பிரார்த்தனையை ஒரு யோகமாகவும் பயிற்சியாகவும் கொண்டு நம்பிக்கையை வளர்த்துக்கொண்டே வந்தால், துன்பங்கள் விலகாவிடினும் அவற்றைப் பற்றிய பயம் நீங்கி, நிம்மதி ஏற்பட்டு விடும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar