அட்சய திருதியை என்று சொன்னதுமே தங்கம் வாங்கும் நாள் என்றுதான் பலரது நினைவுக்கும் வரும். மகாலட்சுமியின் அருள் நிறைந்த நாள் அது. அட்சயம் என்றால், வளர்வது என்று அர்த்தம். மாமனார் தட்சனின் சாபத்தால் தேய்ந்துகொண்டேபோன சந்திரன், சிவபெருமான் அருளால் தேயாமல் வளரத் தொடங்கியதும் அட்சய திருதியை நாளில்தான். கிருஷ்ணர், தன் குருகுலத் தோழரான குசேலர் கொண்டுவந்த அவலைத் தின்றுவிட்டு, அளவற்ற செல்வத்தை அவருக்குக் கொடுத்ததும் ஒரு அட்சய திருதியை தினத்தில்தான். பார்கடலில் இருந்து அமுதமும் மகாலட்சுமியும் தோன்றிய தினம்.வனவாசம் செய்த பாண்டவர்களுக்கு சூரிய பகவான், அட்சய பாத்திரத்தைக் கொடுத்த நாள், சிவபெருமான், தன் நண்பனான குபேரனுக்கு செல்வங்கள் அத்தனையையும் தந்தது, ஜகத்குருவான ஆதிசங்கர மகான் கனகதாரா துதியைப் பாடி தங்க மழை பெய்ய வைத்து ஏழைப் பெண்ணின் வறுமையைப் போக்கியது இப்படி எல்லாமே அட்சய திருதியை அன்றுதான். இவ்வாறு சொல்கிறார்கள், ஆன்மிகப்பெரியவர்கள்.