பதிவு செய்த நாள்
18
மே
2022
12:05
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள பிரம்மாண்ட தேரில் அமைக்கப்பட்டுள்ள, சுரங்கப்பாதை பிரமிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
கொங்கு மண்டலங்களில் உள்ள சிவாலயங்களில் முதன்மையானதாக கருதப்படும், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பெரிய தேர், தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. 92 அடி உயரமுள்ள அந்த தேர், வீதிகளில் அசைந்தாடி வரும் அழகு, பிரமிப்பை ஏற்படுத்தும். இம்முறை, இரு நாள் தேரோட்டம் நடந்த நிலையில், முதல் நாள், நிலையில் இருந்து இழுக்கப்பட்ட தேர், வடக்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாள், அங்கிருந்து இழுக்கப்பட்டு, கோவில் நிலை வந்து சேர்ந்தது. தேர் சிம்மாசனத்தில் அருள்பாலித்த அம்மையப்பனுக்கு பூஜை செய்த படி சிவனடியார்களும், மங்கல இசை வாசித்தபடி கலைஞர்களும் அமர்ந்திருப்பது வழக்கம். அத்தனை பெரிய தேரில் அவர்கள் எப்படி ஏறி, இறங்குகின்றனர் என்பது, பலரது உள்மனதில் எழும் கேள்வி.
பஞ்சமூர்த்தி 63 நாயன்மார்கள் அறக்கட்டளை செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது; பெரிய தேரின் நடுவில் இரண்டு சக்கரங்கள் இருக்கும். அதன் நடுவில் துவங்கி, குறுக்கும் நெடுக்குமாக படிகட்டு போன்று, தேரின் நடையாசனத்துக்கும், சாமி அருள்பாலிக்கும் சிம்மாசனத்துக்கும் இடைப்பட்ட பகுதி வரை சுமார், 23 அடி உயரம் வரை, மரத்தால் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கும். சிவனடியார்களும், இசை கலைஞர்களும் அதன் மீது ஏறி தான், தேரின் மேல் சென்று, கீழிறங்குகின்றனர். இந்த தேருக்கு இதுவும் ஒரு சிறப்புதான். தேர் பார்க்க வரும் பக்தர்கள் இந்த வடிவமைப்பையும் அறிந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.