திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் புதிய தெப்பம்: நாளை வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2022 02:06
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசிவிசாக விழா தெப்பத்திருவிழாவிற்காக புதிய மரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள தெப்பம் நாளை வெள்ளோட்டம் விடப்படுகிறது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். பத்தாம் திருநாளில் தெப்பம் வலம் வரும். இது வரை தெப்பம் தற்காலிகமாக கட்டப்பட்டு உற்ஸவம் நடைபெறும். தற்போது ஆதினமும், மண்டகபடிதாரர்களான கார்காத்த வெள்ளாளர் உறவின்முறையாரும் புதிய தெப்பத்தை மரத்தால் வடிவமைத்துள்ளனர். ரூ 20 லட்சம் மதிப்பலான இத்தெப்பம் பாபனாசம் ஸ்தபதி சக்திநாதனால் வடிவமைக்கப்பட்டது. இந்த ஆண்டு தெப்பக்குளமான சீதளியில் நீர் பெருகியுள்ளதால், வைகாசி விசாக விழாவில் தெப்பம் நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்பாக புதிய தெப்பம் வெள்ளோட்டம் விட குன்றக்குடி ஆதீனகர்த்தர் பொன்னம்பல அடிகள் அறிவுறுத்தினார். இதற்காக சீதளிக்குளத்தில் புதிய தெப்பம் கட்டப்படுவதையும் நேரில் ஆய்வு செய்தார். நாளை சீதளிக்குளத்தில் தெப்ப வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. காலை 9:00 மணிக்கு தெப்ப மண்டபத்தில் கலச பூஜை துவங்குகிறது. பூஜை முடிந்து தெப்பத்திற்கு கலச புறப்பாடு நடைபெறும். பின்னர் பொன்னம்பல அடிகள் வெள்ளோட்டத்தைத் துவக்கி வைப்பார். குளத்தை தெப்பம் ஒரு முறை வலம் வரும். தொடர்ந்து வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்திற்கான பூர்வாங்க பூஜைகள் இன்று மாலை நடைபெறும். விநாயகர்,அஸ்திரத்தேவர், கொடி படாரம் புறப்பாடாகி தேரோடும் வீதிகளில் வலம் வருவர். ஜூன் 3 காலை 6:00 -6:35 மணிக்குள் கொடியேற்றப்பட்டு விழா துவங்குகிறது. இரவு 8:30 மணிக்கு சூரியபிறை, சந்திர பிறையில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.