பதிவு செய்த நாள்
14
ஜூலை
2022
05:07
கருமத்தம்பட்டி: செம்மாண்டாம்பாளையம் புதூர் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன், பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டாம் பாளையம் புதூரில் உள்ள, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன், பெருமாள் சுவாமி கோவில்கள் பழமையானவை. இக்கோவில்களில், திருப்பணிகள் துவங்கப்பட்டு, கருவறை, அர்த்தமண்டபம், கோபுரம், மகா மண்டபங்கள் கருங்கற்களால் புதுப்பிக்கப்பட்டன. வர்ணங்கள் தீட்டப்பட்டு, கடந்த, 10 ம்தேதி விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மூன்று கால ஹோமங்கள், பூர்ணாகுதி இரு நாட்கள் நடந்தன. நேற்று காலை நான்காம் கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து, புனித நீர் கலசங்கள், மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. 9:30 மணிக்கு விமானங்கள், மூலவர்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், மகா தீபாராதனை, தச தானம், தச தரிசனம் மற்றும் அன்னதானம் நடந்தது. விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று வழிபட்டனர்.