பதிவு செய்த நாள்
14
ஜூலை
2022
05:07
அனுப்பர்பாளையம்: திருப்பூர், காலேஜ் ரோடு கொங்கனகிரியில் அருள்மிகு ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ கந்த பெருமாள் திருக்கோவில் உள்ளது.
கோவிலில், திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில், சுற்று சுவர், ராஜகோபுரம், கிரிவலபாதை, மின் விளக்கு, குடிநீர், கழிப்பறை, உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, கோவில் வளாகத்தில் நந்தவனம் அமைத்துள்ளனர். இதில் செம்பருத்தி, பவளமல்லி, பாரிஜாதம், நந்தியாவட்டம், சம்பங்கி, பன்னீர் பூ, செண்பகம், மனோரஞ்சிதம், காகித பூ, துளசி, அரளி, உள்ளிட்ட பல வகையான பூ செடிகள் வைக்கப்பட்டுள்ளது. பூஜைக்கு வேண்டிய மலர்கள் இங்கு பெறும் வகையில் இந்த நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. வனம் இந்தியா பவுண்டேசன் செயலாளர் சுந்தர்ராஜ், கலந்து கொண்டு திறந்து வைத்தார். திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, துணை தலைவர் ராஜாமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாலை 6.00 மணிக்கு கந்தபெருமானுக்கு பவுர்ணமி தின சிறப்பு பூஜை நடைபெற்றது. கந்த பெருமான் வள்ளி, தேவசேனாவுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 6.30 மணிக்கு பெருஞ்சலங்கையாட்டம் நடைபெற்றது. 7.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மக்கள் நல அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.