கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா சிறப்பாக கொண்டாடப்படும்: அமைச்சர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2022 03:07
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரைவிழா சிறப்பாக கொண்டாடப்படும் அமைச்சர் சிவசங்கர் தகவல் பெரம்பலுார்,ஜூலை.15- கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை அன்று அரசு விழாவாக கொண்டாட சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா சிறப்பாக கொண்டாடுவதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அரியலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுலாத் துறை சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: தஞ்சையில் மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் சதய விழா கொண்டாடப்படுவது போல, பல அயல்நாடுகளை வென்று தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்தியவரும், கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயிலை கட்டியவரும், அரியலுார் மற்றும் பெரம்பலுார் மாவட்டத்தில் பல நகரங்கள் கிராமங்களை உருவாக்கியவருமான ராஜேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை அன்று அரசு விழாவாக கங்கைகொண்ட கங்கைகொண்டசோழபுரத்தில் ஜூலை 26 ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதன் மூலம் வரும் ஆண்டுகளில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் விழாவிற்கு தொடர்ந்து வருவதற்கு வாய்ப்பாக அமையும். எனவே, ஆடி திருவாதிரை விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் மாவட்ட நிலை அலுவலர்கள் ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை அனைவருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். அரியலுார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை மேம்படுத்தி பொதுமக்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும், மாமன்னர் ராஜேந்திர சோழனின் சிறப்பை வருங்கால சந்ததியினர் அறிந்து பயன் பெறும் வகையிலும் கங்கைகொண்ட சோழபுரம்,கரைவெட்டி பறவைகள் சரணாலயம், பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள சாத்தனுார் கல்மரம், தொல்லியல் ஆய்வகம் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றார்