மதுரை சித்திரைத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்: ஏப்.,28ல் மீனாட்சி திருக்கல்யாணம்
பதிவு செய்த நாள்
18
ஏப் 2026 10:04
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அழகர்கோவிலிலும் நேற்று கொட்டகை முகூர்த்தம், ஆயிரம் பொன்சப்பரம் யாளி தலையலங்கார நிகழ்ச்சிகளுடன் திருவிழா துவங்கியது. மீனாட்சி கோயில் சித்திரைத்திருவிழா நாளை முதல் ஏப்.,30 முதல் நடக்கிறது. திருவிழா கொடியேற்றம் நாளை காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் நடக்கிறது. தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவர். முக்கிய நிகழ்வாக ஏப்.,25ம் தேதி இரவு 7:05 மணி முதல் 7:29 மணிக்குள் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. ஆவணி மாதம் வரை அம்மன் மதுரையை ஆளும் அரசியாக இருப்பார் என்பது ஐதீகம். ஏப்.,27 திக்குவிஜயத்தை தொடர்ந்து, ஏப்.,28 காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்கான ரூ.500, ரூ.200 கட்டண முன்பதிவு அறநிலையத்துறை, கோயில் இணையதளத்தில் நாளை துவங்குகிறது. ஏப்.,29ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. ஏப்.,30ல் மீனாட்சி கோயில் திருவிழா நிறைவு பெறுகிறது. அதை தொடர்ந்து அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் சித்திரைத்திருவிழா தொடர்ந்து நடக்கிறது. அதற்கான கொட்டகை முகூர்த்தம், ஆயிரம் பொன்சப்பரம் யாளி தலையலங்கார நிகழ்ச்சி நேற்று மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் நடந்தது. இந்நிகழ்வில் இணை கமிஷனர் ஹரிஹரன், பட்டர்கள் அம்பி, பாலாஜி, செந்தில், சுந்தரராஜன், கேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏப்.29ல் மதுரை புறப்படுகிறார் ஏப். 29 மாலை 6:15 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் அலங்காரத்தில் அழகர்மலையில் இருந்து மதுரைக்கு புறப்படுகிறார். ஏப். 30 காலை 6:00 மணிக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. மே 1, அதிகாலை 2:30 மணிக்கு கருப்பணசாமி கோயிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் கள்ளழகர், அதிகாலை 5:35 மணிக்கு மேல் 5:55 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக் குதிரையில் எழுந்தருள்கிறார். பின் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வு நடக்கிறது. வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அன்றிரவு எழுந்தருளும் கள்ளழகர், மே 2 காலை 9:25 மணிக்கு சேஷ வாகனத்தில் தேனுார் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். மதியம் 3:00 மணிக்கு கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கிறது. மே 3 மதியம் 2:00 மணிக்கு கள்ளழகர் ராஜாங்க அலங்காரத்தில் சேதுபதி மண்டபம் புறப்படுகிறார். மே 4ல் அழகர்மலை புறப்பட்டு மறுநாள் காலை 10:40 மணிக்கு மேல் 11:10 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார்.
|