பூஜாரிகள் நாடு, இந்து சமூக வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் : ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2022 03:07
ராமேஸ்வரம்: கிராம பூஜாரிகள் நாடு, இந்து சமூக வளர்ச்சிக்கு அயராது பாடுபட வேண்டும் என கிராம கோயில் பூஜாரிகள் பேரவை மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி தெரிவித்தார்.
ராமேஸ்வரத்தில் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் ஜூன் 30 முதல் ஜூலை 14 வரை பூஜாரிகளுக்கு ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம் நடந்தது. நிறைவு நாளான நேற்று பயிற்சியில் பங்கேற்ற 125 பூஜாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. இதில் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை மாநில தலைவர் ஆர்.ஆர். கோபால்ஜி தலைமை வகித்தார். தமிழக வி.எச்.பி., இணை பொதுசெயலாளர் ராமசுப்பு வரவேற்றார். திருக்கயிலாய ஆதீனம் மகாலிங்க பண்டார சுவாமிகள், கிராம கோயில் பூஜாரிகள் பேரவை நிறுவனர் எஸ். வேதாந்தம் சிறப்புரை ஆற்றினார்கள்.
இதில் ஆர்.ஆர்.கோபால்ஜி பேசியதாவது : இந்து சமூகத்தை அழிக்க நக்சலைட், கம்யூனிஸ்டுகள், நாத்திகவாதிகள், பிற மதத்தினர் செயல்படுகின்றனர். இவர்களுக்கு கைக்கூலியாக அரசியல் கட்சியினர் உள்ளனர். இந்துக்கள் சாதியால் பிரிந்திருப்பதால், பெரும் ஆபத்த ஏற்படும். 5 லட்சம் காஷ்மீர் இந்துக்கள் இன்று டில்லி உள்ளிட்ட பல நகரங்களில் அகதியாக வசிக்கின்றனர். இதற்கு இந்துக்களிடம் ஒற்றுமை இல்லாததே காரணம். இந்து கடவுள், பெண்களை இழிவுபடுத்தும் அரசியல் கட்சியினர் பிற மதத்தினரை இழிவுபடுத்த முடியுமா. ஆகையால் நாடு, இந்து சமூக வளர்ச்சிக்கு பூஜாரிகள் அயராது பாடுபட்டு, இந்துக்களை ஒருங்கிணைக்க, நம் உரிமைக்காக போராட முன்வர வேண்டும் என்றார்.
பின் எஸ் வேதாந்தம் பேசியதாவது : சாதி பாகுபாடின்றி நாம் ஒற்றுமையாக இருந்தால் இந்துக்களை யாரும் ஏளனமாக பேச முடியாது. உங்களுக்குள் இருக்கும் பிரிவுகளை நீக்க வேண்டும். உரிமைக்காக போராட தயாராக வேண்டும். பூஜாரிகள் கிராமங்களில் ஒழுக்கத்தை போதித்து, இந்துக்களை ஒருங்கிணைத்து நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.