சிவாலயங்களில் தட்சிணா மூர்த்தியும், நடராஜரும், பைரவரும் தெற்கு நோக்கி இருக்கிறார்கள். சிவபெருமானே இவ்வகை வடிவங்களில் அமர்ந்துள்ளார். தட்சிணாமூர்த்தி மிக அமைதியாக, ஏதுமே தெரியாதவர் போல் மவுனமாக அமர்ந்துள்ளார். அதேநேரம் நடராஜர் ஆட்ட பாட்டத்துடன் அமர்க்களமாக தலைவிரித்து விடுகிறார். கையில் வாத்தியக்கருவி, அக்னி ஏகமாக அட்டகாசம் செய்கிறார். பைரவரோ வீரத்தின் சின்னமாக இருந்து காவல் காக்கிறார். அமைதியும் நானே, ஆரவாரமும் நானே என உயிர்களுக்கு எடுத்துச் சொல்கிறார். இதேபோல, பெருமாள் ரங்கநாதராக தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தட்சிணாமூர்த்தி அமைதி காப்பதுபோல, பெருமாளும் நித்திரை செய்வது போல் அமைதியாய் இருக்கிறார். இதை யோக நித்திரை என்பர். எல்லாம் அறிந்தபடியே துயில் கொள்ளுதல் என்று பொருள். தமிழில் இதை அறிதுயில் என்பர்.