அயோத்தியில் ராமபிரானுக்கு முடிசூட்டும் வைபவம் பற்றிய பேச்சு வந்தது. ராமனை பதவியில் அமர்த்திவிட்டு, நான் ஓய்வெடுக்கப் போகிறேன் என்றார் தசரதர். இதுபற்றி, அவர் மக்களிடம் கருத்து கேட்டார். பட்டத்து யானை மேல் எங்கள் ராமன் பவனிவர, அதன் குடை அவன் திருமுகத்தை மறைக்க, அந்த உயர்ந்த ராமனை, பட்டாபிஷேக கோலத்தில் பார்க்க நாங்கள் ஆசைப்படுகிறோம், என மக்கள் ஏகமனதாகச் சொன்னார்கள். அதோடு விட்டால் பரவாயில்லையே! தசரதரே! நீர் கீழே இறங்கும். அறுபதாயிரம் வயதான கிழவர் நீர். சீக்கிரம் பதவியிலிருந்து விலகும், என அவசரப்படவும் செய்தார்கள். தசரதருக்கு வருத்தமாகி விட்டது. என் மீது என்ன குறை கண்டீர்கள்? என மக்களிடம் கேட்டார். ராஜா! உன்னுடைய பிள்ளை நற்குணவான் என்று சொன்னோமே தவிர, உம்மிடம் குணக்குறைவு இருப்பதாக நாங்கள் சொல்லவில்லையே! என்றனர். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட அந்த தந்தை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.