பதிவு செய்த நாள்
19
அக்
2023
11:10
சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை விழாவில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் வரும், 27ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதை முன்னிட்டு நேற்று காலை கொடிமரம் பிரதிஷ்டை விழா நடந்தது. அதில் அம்மனுக்கு அபிஷேகம், பூஜை, ஆராதனை நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். காலை, 11:00 மணிக்கு, 33 அடி உயரத்தில், 7.70 லட்சம் ரூபாய் செலவில் வேங்கை மரத்தால் செய்த கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை நடந்தது. தொடர்ந்து ராஜகோபுர விமான கலசம் – 7, மணிகுண்டு கலசம், விநாயகர் விமான கலசம், கல்யாண மண்டப விநாயகர் கலசம் தலா – 1 என, 10 கலசங்கள் புதுப்பிக்க எடுக்கப்பட்டன. மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், கோவில் செயலர் அலுவலர் அமுதசுரபி, அறங்காவல் குழு தலைவர் சக்திவேல் உள்பட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் அந்த மரத்தில், 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 200 கிலோ பித்தளை தகடு பொருத்தப்பட உள்ளது. இன்று மாலை, 6:00 முதல், 9:00 மணி வரை, கோவிலில் கணபதி வழிபாடு, அஷ்ட பலி பூஜை நடக்கிறது.