பதிவு செய்த நாள்
07
மார்
2024
03:03
தொண்டாமுத்தூர்; மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்திற்கு, 63 நாயன்மார்கள், ஆதியோகி தேருடன், பல்வேறு மாநிலங்களில் இருந்து சிவ பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரி விழாவையொட்டி, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சிவ பக்தர்கள், பாதயாத்திரையாக வந்தனர். சென்னை, பெங்களூரு, நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய, 6 இடங்களில் இருந்து வெவ்வேறு நாட்களில் புறப்பட்ட குழுவினர் ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர்களை வடம்பிடித்து இழுத்து வந்தனர். அனைத்து குழுவினரும், ஆலாந்துறை பகுதிக்கு, நேற்றுமுன்தினம் வந்தனர். அங்கிருந்து, 63 நாயன்மார்களை, தனித்தனி பல்லக்குகளில் ஏந்தி, ஆதியோகி தேவர்களுடன் ஈஷாவிற்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களுக்கு, ஈஷாவின் நுழைவு வாயிலில் இருந்து தியானலிங்கம் வரை, கையிலாய வாத்தியங்கள் முழங்க, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், ஹரியானாவை சேர்ந்த மதுராந்தா என்ற இளைஞர், உ.பி., மாநிலம், வாரணாசியில் துவங்கி, 41 நாட்கள், 2,300 கி.மீ., பாத யாத்திரையாக பயணித்து, ஆதியோகியை தரிசினம் செய்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"சிவ பக்தியில் என்னை கரைத்து கொள்வதற்காக, இந்த பாதயாத்திரையை மேற்கொண்டேன். காசி முதல் கோவை வரையிலான இந்த யாத்திரையில், எனது நண்பர் ஒருவரும் உடன் வருவதாக திட்டமிட்டிருந்தோம். ஆனால், யாத்திரை துவங்கும் முன், அவர் விபத்தில் சிக்கி, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், நான் யாத்திரையை துவங்கினேன். ஆதியோகி சிவனின் அருளால், அவசர சிகிச்சை பிரிவில் இருந்து மீண்டு, எனது நண்பர், என்னுடைய யாத்திரையில், இடையில் வந்து சேர்ந்தார். இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது,"என்றார். இந்த யாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும், மஹா சிவராத்திரிக்காக, 40 நாட்கள் சிவாங்கா விரதம் இருந்து வருகின்றனர். தினமும், 2 வேளை மட்டுமே உணவு உட்கொள்ளும் இவர்கள், வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வந்த பின், தியானலிங்கத்தில் தங்களது விரதத்தை நிறைவு செய்ய உள்ளனர்.