பதிவு செய்த நாள்
13
மார்
2024
11:03
பழநி; பழநி அடிவாரம் பகுதியில் முறையான ஆவணங்கள் இன்றி பாதுகாப்பற்ற முறையில் கேன்களில் கொண்டு செல்லப்பட்ட பஞ்சாமிர்தம் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
பழநி கோயில் பஞ்சாமிர்தம் புவிசார் குறியீடு பெற்றது. பழநி வரும் பக்தர்கள் அதிகளவில் பஞ்சாமிர்தத்தை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். சில நாட்களாக பஞ்சாமிர்தம் காலாவதியாகி விற்பனை செய்யப்படுகிறது. அதிகளவில் பஞ்சாமிர்தம் வீணாக்கப்படுகிறது என்ற சர்ச்சைகள் எழுந்தது. அச்சமயத்தில் கோயில் நிர்வாகம் பதில் அளித்தது. இந்நிலையில் நேற்று அடிவாரம் கிரிவீதி பகுதியில் முறையான பாதுகாப்பு இன்றி 67 கேன்களில் பஞ்சாமிர்தம் ஏற்றிய பழநி கோயில் பெயரில் லாரி வந்தது. அந்த லாரியை மறித்து சிறைப்பிடித்த ஹிந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் கொண்டும் செல்லும் இடம், மற்றும் அது குறித்த ஆவணங்களை கேட்டனர். ஆவணங்கள் ஏதும் இல்லாமல் உரிய பாதுகாப்பின்றி கேன்களில் பஞ்சாமிர்தம் ஏற்றி செல்வதால் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் லாரியை சிறை பிடித்தனர். அங்கு வந்த போலீசார் லாரி மீட்டு போலீஸ் ஸ்டேஷன் எடுத்துச் சென்றனர் இதில் பொதுமக்கள் காலாவதியான பஞ்சாமிர்தத்தை வேறு இடத்தில் கொண்டு சென்று அழிக்க முயற்சி நடக்கிறதா அல்லது பஞ்சாமிர்தத்தை கடத்திச் செல்கின்றனரா என்ற கேள்வி எழுப்பினர்.
இது குறித்து கோயில் நிர்வாகம் அளித்த அறிக்கையில், பஞ்சாமிர்த நிலையங்களில் பிப்.9ல் வைக்கப்பட்டிருந்த பஞ்சாமிர்தம் கெட்டுப் போனதாக பொய்யாக ஊடகங்களில் அவதூறு பரப்பி, பக்தர்கள் கோயில் பஞ்சாரம் பஞ்சாமிர்தம் வாங்க கூடாது என்ற உள்நோக்கத்துடன் செயல்பட்டு விஷ்வ ஹிந்து பரிசத்தைச் சேர்ந்த செந்தில்குமார், ஹிந்து முன்னணி அமைப்புச் சேர்ந்த பாலன், அஜித், பத்மநாபன், ராஜா, பரணி, பா.ஜ., வை சேர்ந்த குணா, வெங்கடேஷ்,செல்வகுமார் ஆகியோர் அவதூறு பரப்பி வருகின்றனர். தைப்பூச விழா முடிந்து விற்பனை செய்ய இயலாமல் தேக்கமடைந்த பஞ்சாமிருதங்களை தற்போது கழிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், மார்ச் 12 காலை, கோயில் வாகனத்தில் கள்ளிமந்தயத்தில் உள்ள காலி இடத்தில் குழிதோண்டி மூடுவதற்கு கொண்டு செல்ல பட்டது. அடிவாரம் பகுதியில் மேற்படி 9 நபர்களும் வாகனத்தை மரித்து வாகனத்தின் பின்பகுதி கதவை, வலுக்கட்டாயமாக திறந்து வாகனத்தில் மூடப்பட்டிருந்த கேன்களை புகைப்படம் எடுத்து வாகனத்தை இயக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். கோயில் நிர்வாகத்திற்கு எதிராக, பக்தர்களின் நலனுக்கு விரோதமாக, ஊடகங்களில் கெட்டுப் போன பஞ்சாமிர்தத்தை பக்தர்களுக்கு விற்கிறார்கள் என்ற அவதூறு பரப்பி, கோயில் பணிக்கு இடையூறு செய்தனர். அரசாங்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாக பொதுமக்கள் யாரையும் கோயில் பஞ்சாமிர்தம் வாங்காத நிலையை ஏற்படுத்தி கோயில் நிர்வாகம் தானாகவே பஞ்சாமிர்தம் விற்பனையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என உள்நோக்கத்துடன், தங்களுடைய குடும்ப தயாரிப்பு பஞ்சாமிர்தம் மட்டுமே விற்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடனும் பொதுமக்களை அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் குற்றச்செயல் புரிந்து வருகின்றனர். எனவே அவர்கள் மீது அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்திற்கு எதிராக தொடர்ந்து திட்டமிட்டு ஊடகங்களில் பொய்யாக அவதூறு பரப்பி, கோயில் பணிக்கு இடையூறு செய்தும் அரசாங்கத்திற்கு அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பிய 9 நபர்கள் மீதும் பக்தர்கள் நலன் கருதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் எஸ் .பி., க்கு கோயில் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் கோயில் பஞ்சாமிர்தம் வாங்கி உபயோகிக்கின்றனர். ஆனால் இதுவரை ஒருவர் கூட உடல் நலம் பாதிக்கப்படவில்லை. எனவே பொய்யான தகவலை பக்தர் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. பழநி அடிவாரம் போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.