திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2026 11:04
திருவள்ளூர்: சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 7-ம் நாளான இன்று திருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. நான்கு மாட வீதிகள் வழியாக வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் வலம் வந்தார்: நோயை தீர்க்க வல்லவரான வீரராகவருக்கு உப்பு மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தில் கொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரமோற்சவ விழா கடந்த 22 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனத்தில் உற்சவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான இன்று வீரராகவர் கோயிலின் 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட திருத்தேர் பவனி நடைபெற்றது. காலை 5 15 மணிக்கு தேருக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் காலை 7.30 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டு நான்கு மாட வீதிகள் வழியாக சென்று தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் நோயை தீர்க்க வல்லவர் என்பதால் பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தில் கொட்டி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த தேர் திருவிழாவில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வீரராகவரை வழிபட்டு சென்றனர்.