சபரிமலை: சபரிமலையில் பக்தர்களுக்கு அதிக வசதி செய்து கொடுப்பதில் திருவிதாங்கூர் தேவசம்போர்டும், உயர்மட்ட கமிட்டியும் கவனம் செலுத்தி வருகிறது. பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு இரண்டு பாøதைகள் உள்ளது. பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக செல்லும் பரம்பரை பாதை. மற்றொன்று சுவாமி ஐயப்பன் ரோடு. இந்த ரோடு டிராக்டர்களில் பொருட்களை சன்னிதானம் கொண்டு செல்ல முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. தரிசனம் முடிந்து செல்லும் பக்தர்கள் இந்த வழியை அதிகமாக தேர்வு செய்வது வழக்கம். ஆனால் கரடு முரடான ரோட்டில் டிராக்டர் செல்வதில் சிரமம் இருந்தது. பலமுறை இங்கு டிராக்டர் கவிழ்ந்து விபத்தும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை உயர்மட்ட கமிட்டி ஐந்து கோடி ரூபாய் செலவில் சீரமைத்தது. இரண்டரை மீட்டர் அகலம் உள்ள இந்த ரோடு தற்போது ஐந்து மீட்டர் அகல ரோடாக மாற்றி கான்கிரீட் செய்யப்பட்டுள்ளது.
முன்பு ஒரு டிராக்டர் மூன்று முறை மட்டுமே ஒரு நாள் சென்று வரமுடியும். ஆனால் தற்போது பத்து முறை சென்று வர முடிவதால் சன்னிதானத்துக்கு தேவையான பொருட்கள் தட்டுபாடு இல்லாமல் வருகிறது. மேலும் பக்தர்கள் சிரமம் இல்லாமல் மலை இறங்க முடிகிறது. இதுபோல பம்பையில் இருந்து நீலிமலை- அப்பாச்சிமேடு வழியாக வரும் பக்தர்கள் செங்குத்தான ஏற்றத்தில் மிகவும் சிரமப்பட்டனர். பகல் நேரத்தில் சூரியனின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் சிரமப்பட்டனர். இதை போக்கும் வகையில் இந்த பாதையின் பெரும்பாலான இடங்களிலும் தகரத்தால் வேயப்பட்ட நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் மலைஏறும் பக்தர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது என்று பக்தர்கள் கூறுகின்றனர். சன்னிதானத்தில் பெரும்பாலான வியாபார நிறுவனங்களும் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது. இந்த இடங்களை பக்தர்கள் வசதிக்காக பயன்படுத்துவதில் தேவசம்போர்டு அதிக கவனம் செலுத்தி வருகிறது. 108 படிகள் ஏறி பாண்டித்தாவளம் செல்லும் பாதையில் உள்ள கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு அங்கு தரை ஓடுகளால் பக்தர்கள் தங்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. இது மகரவிளக்கு நாளில் பக்தர்கள் ஆபத்து இல்லாமல் இருந்து ஜோதி தரிசனம் நடத்த வசதியாக அமையும். சன்னிதானத்தில் 18-ம் படியின் இடது புறம் மட்டுமே பிரசாத கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது மாளிகைப்புறம் கோயில் அருகே உள்ள கட்டிடத்திலும் பிரசாத கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரசாத கவுண்டர்களில் ஏற்படும் நெரிசல் தவிர்க்கப்படுகிறது. தனியார் அன்னதானம் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு தேவசம்போர்டு சார்பில் 24 மணி நேரமும் கஞ்சி அன்னதானமாக வழங்கப்படுகிறது.