பதிவு செய்த நாள்
29
செப்
2024
08:09
சென்னையை சேர்ந்த ஆன்மிக எழுத்தாளர் அரவிந்த் சுப்பிரமணியம். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என, தொடர்ந்து குரல் கொடுத்தவர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்ததை அடுத்து, ராமபிரானுக்கு தன்னாலான காணிக்கையை சமர்ப்பிக்க விரும்பினார். தனக்கு என்ன வேண்டும் என்பதை, ராமரே வெளிப்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து வேண்டி வந்தார். இந்தச் சூழலில், அவரிடம் பக்தர் ஒருவர் தான் கண்ட கனவை சொன்னார்.
அதாவது, தன்னை போன்ற ஒரு உற்சவர் விக்ரகம் செய்து சமர்ப்பிக்க சொல்லும்படி, ராமர் கூறியதாக அவர் தெரிவித்தார். கடந்த ராமநவமி முதல் விக்ரகம் செய்யும் திருப்பணியை அரவிந்த் தொடங்கினார். இதில், அவரது உறவினர் கணேஷ் நாகராஜும் இணைந்தார். இரண்டு அடி உயர பஞ்சலோக விக்ரகம் தயாரானது. மூலவர் போலவே அமைந்த அந்தச் சிலையை அயோத்தியில் சமர்ப்பிக்க, காஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் அருளாசி வழங்கினார். ராமர் சிலை அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டு, விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டதுடன், ேஹாமமும் நடந்தது. பின், யாகசாலையில் இருந்து விக்ரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவிலில் சமர்ப்பித்தனர். கோவில் நிர்வாக டிரஸ்ட் பொதுச்செயலர் சம்பத் ராய், டிரஸ்ட் அங்கத்தினரான உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஷ்வ பிரசன்ன தீர்த்தர் சுவாமிகள், அதை பெற்றுக் கொண்டனர். உலக நன்மை வேண்டி, இந்த உற்சவமூர்த்தி எழுந்தருளி இருப்பதாக அரவிந்த் சுப்பிரமணியம் கூறியுள்ளார். –நமது நிருபர்–