பதிவு செய்த நாள்
24
அக்
2024
04:10
கூவத்துார்; கல்பாக்கம் அடுத்த கூவத்துாரில், சில நுாற்றாண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பழமையான அங்காளம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, கண்டெடுக்கப்பட்ட அங்காளம்மன் சிலையை நிறுவி, கோவில் உருவானதாக கருதப்படுகிறது. மூலவர் அங்காளம்மன், விநாயகர், பாலமுருகர், துர்க்கை, மதுரைவீரன், பாவாடைராயன், சப்தகன்னியர் ஆகியோர் வீற்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், ஆய்வாளர், அறங்காவலர்கள் கட்டுப்பாட்டில், நீண்டகாலமாக கோவில் நிர்வகிக்கப்பட்டது. அத்துறையின்கீழ் இயங்கும், மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகாத்திடம், கடந்த 2008ல் கோவில் ஒப்படைக்கப்பட்டது. அதே ஆண்டு மஹா கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. தற்போது, மீண்டும் மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்து, திருப்பணிகள் நடக்கின்றன. கோவில் நுழைவாயிலில், முதல்முறையாக மூன்றுநிலை ராஜகோபுரம், மூலவர் சன்னிதி புனரமைப்பு, மண்டபத்தில் சுண்ணாம்பு, வண்ணம் ஆகியவற்றை நீக்கி, பாரம்பரிய தன்மையிலான கருங்கற்களில் நடைதளம் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள், உபயதாரர் வாயிலாக, 1.5 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருவதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.