பதிவு செய்த நாள்
24
நவ
2012
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ரதத்தில் பொருத்தப்பட்ட ஹைட்ராலிக் பிரேக்கை, பெல் தொழில் நுட்ப பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். இன்று, ஆறு பேர் கொண்ட டாக்டர்கள் குழுவுடன் ரதத்துடன் வருகின்றனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில் ஆறாம் நாள் திருவிழாவில் பகலில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலாவும், தொடர்ந்து, 63 நாயன்மார் சிலைளின் ஊர்வலம் நடந்தது. இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் வெள்ளி ரதத்தில் வண்ண மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர். நவ.24ல் 63 அடி உயரமுள்ள மஹா ரத தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி, அதிகாலை, 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. பின்னர் பஞ்ச மூர்த்திகள் கோவில் எதிரே, 16 கால் மண்டபத்தில் எழுந்தருளி தனித்தனி தேரில் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதில், விநாயகர் தேர் அதிகாலை, 5.45 மணிக்கும், காலை, 10.30 மணிக்கு மஹா ரத தேரோட்டம் வடம் பிடிக்கப்படும். இதற்காக மஹா ரதம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று தேர்களின் நிலை மற்றும் ஹைட்ராலிக் பிரேக்கின் செயல்பாடு குறித்து, பெல் தொழில் நுட்ப பொறியாளர்கள் ஆய்வு செய்து கட்டுபாடான நல்ல நிலையில் உள்ளதாக சான்றளித்துள்ளனர். மஹா ரத தேரோட்டத்தின் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மஹாரதத்தின் பின்னால் செல்ல, ஆறு டாக்டர்கள், 15 நர்ஸ்கள் அடங்கிய மருத்துவ குழுவினருடன், இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில், 2,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, சீருடை அணியாத, 300 குற்றப்பிரிவு போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேர் செல்லும் மாட வீதிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது, போலீஸ் மற்றும் தனியார் வீடியோ கிராஃபர்கள் மூலம் பக்தர்கள் கூட்டம் மற்றும் தேர் செல்வது வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. அதிகாலை தேர் புறப்படும் முன் மாட வீதிகளில் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.