பதிவு செய்த நாள்
26
நவ
2012
10:11
ஆர்.கே.பேட்டை: விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.ஆர்.கே.பேட்டை அடுத்த, பெரிய நாகபூண்டி கிராமத்தில் உள்ளது செல்வ விநாயகர் கோவில். பாழடைந்து கிடந்த இக்கோவிலில் புனரமைப்பு பணிகள், கிராம மக்கள் ஒத்துழைப்புடன் நடந்து முடிந்தது. இந்நிலையில், நேற்று காலை, கோபுர விமானத்திற்கு, ராஜாமணி சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்னாள் அறங்காவலர், ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார். கடந்த வெள்ளியன்று, நவகிரக சாந்தியுடன் யாகசாலை அமைக்கப்பட்டது. தினமும், மூன்று கால கலச பூஜை, தீபாராதனைகள் நடந்தன.நேற்று காலை, 7:00 மணிக்கு புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின், கோவில் கோபுர விமானத்தின் மீது கலச நீர் ஊற்றப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்து சென்றனர். மாலை, வாண வேடிக்கையுடன் உற்சவர் புறப்பாடு நடந்தது. இரவு, பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது.