பதிவு செய்த நாள்
13
ஜன
2025
12:01
சென்னை : ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடராஜ சுவாமி வீதி உலா வந்தார்.
சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று நடைபெற்றது. தமிழகத்தின் முக்கிய கோவில்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ஆகமவிதிப்படி, திருவாதிரை நட்சத்திரத்தை அடிப்படையாக கொள்ளாமல், பவுர்ணமி திதியை அடிப்படையாக கொண்டு, ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகிறது. இதன்படி, இங்கு, இன்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி, நேற்று இரவு 12 மணிக்கு, உற்சவர் நடராஜர் கபாலீசுவரர் கோவில் திருமண மண்டபத்தில் எழுந்தருளினார். உற்சவருக்கு பால், இளநீர் உட்பட 16 பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இன்று அதிகாலை 5 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடந்தது. நடராஜர் வீதி உலா மயிலாப்பூரின் நான்கு மாடவீதிகளிலும் நடைபெற்றது. அதிகாலையிலேயே பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்கள் தேவாரம் பாடி இறைவனை வழிபட்டனர்.