முளைகொட்டு திண்ணை கும்பாபிஷேக விழா ; சீர்வரிசையுடன் பங்கேற்ற முஸ்லிம்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2025 03:02
காரைக்குடி; காரைக்குடியில் நடந்த முளைகொட்டுத் திண்ணை கும்பாபிஷேக விழாவில் முஸ்லிம்கள்சீர்வரிசையுடன் கலந்து கொண்டனர்.
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் மாசி பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறும். அண்ணா நகரில் இருந்து மக்கள் முளைப்பாரி எடுத்து வந்து முத்துமாரியம்மன் கோயிலில் செலுத்துவர். முளைப்பாரி வளர்ப்பதற்கு என அண்ணாநகர் பகுதியில் முளைகொட்டு திண்ணை உள்ளது. இப்பகுதியில், இந்துக்கள், முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். இன்று அண்ணாநகர் பகுதியில் உள்ள முளைகொட்டு திண்ணை கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், அண்ணா நகர் பள்ளிவாசல் சார்பில் முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜமாத் தலைவர் முகமது அலி ஜின்னா தலைமையில் சீர்வரிசையுடன் வந்த முஸ்லிம்கள்களை அப்பகுதி மக்கள், மேளதாளத்துடன் வரவேற்றனர். இந்துக்கள் கொண்டாடும் விழாவில் இஸ்லாமியர்கள் சீர்வரிசையுடன் கலந்து கொண்டது மத ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது.
தலைவர் முகமது அலி ஜின்னா கூறுவையில் : இப்பகுதியில் மத வேறுபாடு இன்றி அனைவரும் மாமன், மச்சான்களாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தோம். அனைவரும் கலந்து கொண்டனர். தற்போது, முளைகொட்டு திண்ணை கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு விடுத்ததன் பேரில் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விழாவில் சீர்வரிசையுடன் கலந்து கொண்டோம் என்றார்.