பதிவு செய்த நாள்
11
பிப்
2025
11:02
வடபழநி: தைப்பூசத்தை முன்னிட்டு வடபழநி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
வடபழநி முருகன் கோவிலில், ஆண்டு தோறும் தைப்பூசம் விழா சிறப்பாக நடைபெறும். இன்று தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு, பள்ளியறை பூஜை முடித்து அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலையில் இருந்து, கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. விழாவையொட்டி, வடபழநியைச் சுற்றியுள்ள பகுதிகளான விருகம்பாக்கம், அசோக் நகர், கோடம்பாக்கம், கே.கே.நகர் என, பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். பெரும்பாலான பக்தர்கள், பால் காவடி எடுத்து வந்த நிலையில், மற்ற பக்தர்கள் புஷ்ப அலங்காரம், பன்னீர் மற்றும் அலகு காவடிகளை எடுத்து வந்தனர். அலகு குத்தி தேர் இழுத்து பிரார்த்தனையை பக்தர்கள் நிறைவேற்றினர். பக்தா்கள் கூட்டத்தை கட்டப்படுத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது தரிசனம், கட்டண தரிசனத்துக்கான பக்தா்கள் தெற்கு நுழைவாயில் வழியாக அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியோா் கா்ப்பிணி, கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் தெற்கு நுழைவாயில் சாலை வழியாக வந்து இடதுபுறம் திரும்பி மேற்கு நுழைவாயில் வழியாக தனி வழியில் வரிசையில் வந்து சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிர்ந்தது வடபழநி; இதுவரை இல்லாத அளவில் இந்த தைப்பூசத்திருவிழாவில் வடபழநி ஆண்டவரை தரிசிக்க பக்தர்கள் திரளாக காவடி எடுத்து வந்ததால் வடபழநியே அதிர்ந்தது.
பல பெரியவர்களுடன் நிறைய சிறுவர்களும் காவடி சுமந்து வந்தனர்,பக்தர் ஒருவர் தனது மார்பில் பலகைகைப் போட்டு அதன் மீது உரல் வைத்து அதில் ஏழு பெண்களைக் கொண்டு மஞ்சள் இடித்து வழிபாடு செய்தார். ஒரு பக்தர் முதுகில் இரும்பு கொக்கியை மாட்டி அதன் மறுமுனையை உரல் கல்லுடன் இணைத்து இழுத்துச் சென்றார் இதே போல இரும்பு கொக்கி மாட்டி விநாயகர், முருகன் தேர்களை பக்தர்கள் இழுத்துச் சென்றனர். காவடி சுமந்து வந்த பக்தர்களுக்கு வழி நெடுகிலும் குளிர்பானம் நீர்மோர் வழங்கினர் சிலர் அவரது பாதங்களை தண்ணீரில் நனைத்து குளிர்வித்தனர்.பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரும்பிய பக்கமெல்லாம் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை அதிரச்செய்தது.