பதிவு செய்த நாள்
28
மார்
2025
12:03
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காணிக்கையாக செலுத்தப்பட்டு பயன்படுத்த முடியாத நகைகளை டிபாசிட் செய்து வருவாய் ஈட்டும் வகையில், இரு நாட்களாக ஓய்வுபெற்ற நீதிபதி மாலா தலைமையில் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ் 44,301 கோயில்கள் உள்ளன. அதிக வருவாய் வரக் கூடிய கோயில்களில் காணிக்கையாக செலுத்தப்பட்டு பயன்பாடில்லாத தங்க நகைகளை உருக்கி தங்கக்கட்டியாக்கி மும்பை ஸ்டேட் வங்கியில் டிபாசிட் செய்து அதற்கான வட்டியை ஆண்டு வருவாயாக அறநிலையத்துறை பெற்று வருகிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை பயன்பாடில்லாத நகைகளை கணக்கெடுக்க மதுரை மண்டலத்திற்கு நீதிபதி மாலா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு இரு நாட்களாக மீனாட்சி அம்மன் கோயி ல், உப கோயில்களின் உண்டியல்களில் காணிக்கையாக கிடைத்த நகைகளை கணக்கெடுத்து வருகிறது. இன்றுடன் இப்பணி நிறைவு பெறுகிறது. இதன்பிறகே எவ்வளவு மதிப்புள்ள நகைகள் உருக்கப்பட உள்ளன என்ற விபரம் தெரிய வரும். இதுவரை டிபாசிட் செய்த தங்கத்தின் மதிப்பு, அதன் மூலம் கிடைக்கும் வருவாய் போன்ற விபரங்களை கோயில் தரப்பில் இருந்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1977 முதல் தங்க நகைகளை கட்டியாக்கி டிபாசிட் செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் நகைகள் ஏற்கனவே 2000, 2007, 2011ல் தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயிலுக்கு ஆண்டுதோறும் ரூ.2 கோடிக்கும் மேல் வருவாய் கிடைத்து வருகிறது.