பதிவு செய்த நாள்
08
ஏப்
2025
03:04
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவிலில், நடந்த குண்டம் விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மேட்டுப்பாளையம் நகரில், ஊட்டி சாலையில் உள்ள காந்தி மைதானத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட மிகவும் பழமையான மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குண்டம் மற்றும் தேர்த் திருவிழா, கடந்த மாதம், 25ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. இன்று காலை, 8:30 மணிக்கு, பவானி ஆற்றில் இருந்து அலங்காரம் செய்த சிம்ம வாகனத்தில் அம்மன் சுவாமியை கோவிலுக்கு அழைத்து வந்தனர். 9:00 மணிக்கு தலைமை பூசாரி கோகுல் சபரி குண்டத்தை சுற்றி வந்து, பூப்பந்து உருட்டிவிட்டு முதலில் குண்டத்தில் இறங்கினார். அதைத் தொடர்ந்து பூசாரி லோகேஸ்வரன், சக்தி கரகம் எடுத்து வந்த சேகர், வசந்த் ஆகியோரும், கோலக்கூடையை தூக்கி வந்த நாச்சிமுத்து ஆகியோர் குண்டம் இறங்கினர். அதைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஹிந்து சமய அறங்காவலர் நியமன குழு உறுப்பினர் கவிதா கல்யாணசுந்தரம் மற்றும் நீண்ட வரிசையில் காத்திருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவில் கவுன்சிலர் விஜயகாண்டீபன் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை மாலை, 4:30 மணிக்கு தேர் வடம் பிடித்தலும், 10ம் தேதி அம்மன் திருவீதி உலாவும், 11ம் தேதி காலையில் பால் குடம் எடுத்தலும், மாலையில் மஞ்சள் நீராட்டும், மகா அபிஷேகமும், 14ம் தேதி மறுபூஜை மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பேபி ஷாலினி செய்து வருகிறார்.