பதிவு செய்த நாள்
21
ஏப்
2025
03:04
கோத்தகிரி; கோத்தகிரி கடைவீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவில், அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. கோத்தகிரி கடைவீதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் வருடாந்திர திருவிழா, கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் ஒரு நிகழ்வாக, இன்று காலை, 9:00 மணிக்கு, கோத்தகிரி வட்டார மகளிர் மன்றம் சார்பில், கடைவீதி அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில் இருந்து, மாரியம்மன் திருக்கல்யாணம் சீர்வரிசை ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, கோவை காமாட்சிபுரி ஆதீனம் குருமகா சந்நிதானம் தவத்திரு ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில், சிவத்திரு குழந்தை வேல் மற்றும் சக்திவேல், ஞான சம்பந்தம் ஆகியோர் வைபவத்தை நடத்தி வைத்தனர். காலை, 11:00 மணிக்கு, அபிஷேக மலர் அலங்கார வழிபாடு, பகல், 1:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலையில் அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.