பதிவு செய்த நாள்
03
மே
2025
11:05
சென்னை; சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் சித்திரைப் பெருவிழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகார நந்தி சேவை நடந்தது. காலை 6:00 மணிக்கு, அதிகார நந்தி வாகனத்தில், அம்பாளுடன் எழுந்தருளிய உற்சவர் காரணீஸ்வரர், கோபுர தரிசனம் தந்தார். பின், நான்கு மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருடன், மயில்வாகனத்தில் முருகப் பெருமானும், அன்ன வாகனத்தில் அம்பாளும் வலம் வந்தனர். 5ம் தேதி மதியம் 1:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. நள்ளிரவு 12:00 மணிக்கு வெள்ளி ரிஷப வாகன புறப்பாடு நடக்கிறது. விழாவின் பிரதான நிகழ்வான தேர்த்திருவிழா வரும் 7ம் தேதி காலை 6:00 மணிக்கு நடக்கிறது. வரும், 8ம் தேதி மாலை புஷ்ப விமானத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு சுவாமி திருக்காட்சி அளிக்கிறார். வரும் 9ம் தேதி இரவு, பிச்சாடனார் கோலத்தில் திருவீதி உலா நடக்கிறது. திருக்கல்யாண உற்சவம் 10ம் தேதி நடக்கிறது. அன்று இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. அடுத்த நாள் புஷ்ப பல்லக்கு சேவை நடக்கிறது.