பதிவு செய்த நாள்
28
மே
2025
05:05
காஞ்சிபுரம்; அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில், கடந்த 4ம் தேதி துவங்கி, இன்று நிறைவு பெற்றது. இதையொட்டி, காஞ்சிபுரம் – வந்தவாசி நெடுஞ்சாலை, கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ள, 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், அக்னி நட்சத்திர நிவர்த்தி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், அக்னி பகவானுக்கு, பால், தயிர், இளநீர், சந்தனம், ஜவ்வாது, உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் மஹா தீபாராதனை நடந்தது.
*சின்ன காஞ்சிபுரம், வரதராஜபுரம் தெருவில் உள்ள வரசக்தி விநாயகர் மற்றும் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், இன்று அக்னி நிவர்த்தி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு, 108 இளநீர் அபிஷேகம் நடந்தது. நீர்மோர், தயிர் சாதம், புளியோதரை, கூழ், நொய் கஞ்சி, பழரசம், குளிர்ச்சி காய்கறிகள், பழங்கள் அம்மனுக்கு படையலிடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
*காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெரு, சித்தி, புத்தி காசி விநாயகர் கோவிலில், மூலவருக்கு 108 இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. பானகம், தயிர்சாதம், எலுமிச்சை, புளியோதரை உள்ளிட்டவை சுவாமிக்கு நைவேத்யம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.